எஸ்பிஐ வங்கியில் ஒரே நாளில் ரூ. 53,000 கோடி பழைய நோட்டுகள் டெபாசிட் !
எஸ்பிஐ வங்கியில் ஒரே நாளில் ரூ. 53 ஆயிரம் கோடிக்கு பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தி புதிய நோட்டுக்களை மக்கள் பெற்று வருகின்றனர். பலர் தங்களது வங்கியில் டெபாசிட்டும் செய்து வருகின்றனர். அப்படி இன்று ஒரு நாளில் மட்டும் ரூ 53 ஆயிரம் கோடி ரூபாய் எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஆகியுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 9ம் தேதியில் இருந்து செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. இதனால் மக்கள் கையில் இருக்கும் பழைய நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்று தவித்து வந்தனர். இதனிடைய பழைய நோட்டுக்களை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்றிலிருந்து வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 4000 வரை மட்டுமே பழைய நோட்டு மாற்ற முடியும் என்றும் மீதி இருக்கும் பணத்தை உரிய ஆவணங்களை காட்டி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் செலுத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை நீண்ட வரிசையில் நின்று மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அதிகமாக உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.
இந்த வகையில், இந்தியாவின் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிகளில் மிக அதிகமான கிளைக் கொண்ட எஸ்பிஐ வங்கியில் இன்று மட்டும் 53 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என்று எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.