கள்ளக்காதலை கண்டித்த மனைவி, மகனை கூலிப்படையை ஏவி மிரட்டிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்
சென்னை: கள்ளக்காதலை கண்டித்த மனைவி மற்றும் மகனை கூலிப்படையை ஏவி மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை டிபி சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராமநாதகண்ணன். அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னை ஆயிரம்விளக்கு காவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை மதியம் 1.30 மணி அளவில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் ராமநாதகண்ணனின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி மற்றும் மகனை மிரட்டியுள்ளனர்.
பயந்து போன சப் இன்ஸ்பெக்டரின் மனைவியும், மகனும் அலறிய சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கூலிப்படையினரை பிடித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கூலிப்படையைச் சேர்ந்தவர்களின் பெயர் சிவகுமார், கலியத்துல்லா என்று தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கூறியதாவது,
அயனாவரத்தில் வசித்து வரும் எங்களை சப் இன்ஸ்பெக்டர் ராமநாதகண்ணன் தான் அவரின் மனைவி, மகன் ஆகியோரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டுமாறு கூறினார். அவருக்கும், பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இருக்கும் கள்ளக்காதலை அவரது மனைவியும், மகனும் கண்டுபிடித்து அவரை கண்டித்துள்ளனர். இதனால் தான் அவர் அவர்களை மிரட்டுமாறு எங்களை ஏவிவிட்டார் என்றனர்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரின்பேரில் சிவகுமார் மற்றும் கலியத்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதகண்ணன் மீது ஏற்கனவே நிறைய புகார்கள் உள்ளன. அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது திருடு போய் மீட்கப்பட்ட இருசக்கர வாகனத்தை விற்க முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து தான் அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டார்.