ரஜினியை விமர்சிப்பதால் எனக்கு இந்த நிலை.. உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு
திசையன்விளை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர் எஸ்.பி.உதயகுமாரன் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவாக ரிபப்ளிக் டிவி நேற்று ஸ்டிங் ஆபரேசன் என்ற பெயரில் ஒரு காட்சியை காண்பித்தது. அதில் உதயகுமாரன் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தேவாலயங்களுக்கு இதில் பங்கிருப்பதாக அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், உதயகுமாரன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஓர் இளம்பெண் வீட்டுக்கு வந்து தான் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு செய்வதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். நிறையப் புத்தகங்கள் இலவசமாகக் கொடுத்தேன். கேள்விகள் கேட்டாள், பதில் சொன்னேன். வீட்டில் டீ போட்டுக் கொடுத்தார்கள்.
தனது பேராசிரியர் ஒருவர் கொஞசம் நிதியுதவி செய்ய விரும்புவதாகச் சொன்னாள். நான் இயக்கத்துக்கு எப்போதுமே வங்கிக் கணக்கு கிடையாது அதனால் நான் அந்த உதவியைப் பெற முடியாது என்றேன். வேறு எந்த வழியிலும் உதவ முடியாதா என்று கேட்டாள். எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எங்கள் கட்சிக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதிலும் வெளிநாட்டு பணம் போட முடியாது என்றெல்லாம் சொன்னேன்.
நீ கூட வெளி நாட்டிலிருந்து பணம் போட முடியாது, ஆனால் உன் பெற்றோர் இந்தியாவுக்குள்ளே இருந்து பணம் போட முடியும் என்பது போன்ற விபரங்களைச் சொன்னேன். பணம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ரசீது கொடுத்துவிடுகிறோம் என்பதையும் சொல்லி, வெளிநாட்டுப் பணம் பெற நான் விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன். இதுதான் நடந்தது. அவளிடம் என் புத்தகங்களுக்குக்கூட காசு வாங்கவில்லை. வருங்காலத்தில் பணம் அனுப்பு என்றும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், ரஜினியை எதிர்ப்பதும் தனக்கு எதிரான சதிக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கூடங்குளம் விரிவாக்கத்தை எதிர்ப்பது, ரஜினியை பலமாக விமர்சிப்பது, புதிய விடியல் இதழில் "உலக அக்ரஹாரம்" எனும் தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதுவது, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற பாசிச அமைப்புக்களை கடுமையாகச் சாடுவது, தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து தமிழ் மக்களுக்காக இயங்குவது, தமிழ் அமைப்புக்களை ஒன்றிணைக்க முயல்வது, தலித்-இசுலாமிய-கிறித்தவ இயக்கங்களோடு கைகோர்த்து நிற்பது - இவைதான் என்னைக் கண்டு பயப்படுவதற்கான காரணங்கள். இவ்வாறு அந்த பதிவு கூறுகிறது.
இந்த நிலையில், உதயகுமாருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மண்ணுக்காக போராடுபவர்களை விளக்கம் கொடுக்க வைப்பது அரசியலின் பெரும் சாபம் என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல உதயகுமாருக்கு எதிராக கருத்து பதிவிடுவோரும் சிலர் உள்ளனர். மொத்தத்தில் இந்த சம்பவம், விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது.
அர்ணாப் கோஸ்வாமியை எடிட்டராக கொண்ட ரிபப்ளிக் டிவி சேனல், தொடர்ந்து, எதிர்க்கட்சிகளையும், பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை செய்வோரையும் மட்டும் குறி வைத்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதனால், அது பாஜக சார்பில் மறைமுகமாக இயக்கப்படும் சேனல் என்ற கெட்ட பெயரை மக்களிடம் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.