2018-ல் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் - தமிழிசை ஆக்ரோஷப் பேச்சு: வீடியோ
தமிழகத்தில் 2018ஆம் ஆண்டு, ஜார்ஜ் கோட்டையில் காவி கொடிதான் பறக்கும் என திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
திருச்சி: 2018ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆக்ரோஷமாக சபதம் எடுத்துள்ளார்.
திருச்சியில் பாஜகவின் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழிசை, தமிழகத்தை காவிகள் ஆளக் கூடாது என மு.க.ஸ்டாலின் கூறினார். நான் தமிழகத்தை காவிகள் தான் ஆளவேண்டும். பாவிகள் ஆளக் கூடாது என பதில் அளித்தேன். 2018ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என்று கூறினார்.
அடுத்து பேசிய பொன்.ராதா கிருஷ்ணன், 2018ஆம் ஆண்டு பொங்கலின் போது பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் இருக்கும். விவசாயிகள் தங்கள் நலனுக்காக பாஜகவுக்கு ஓட்டுப் போட வேண்டும் என கூறினார்.
ஜார்ஜ் கோட்டையில் ஆளும் கட்சியின் கொடி பறக்காது. எப்போதும் தேசியக் கொடிதான் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் டெல்லியில் 41 நாட்கள் தொடர்ந்து வெயிலில் போராடியும் விவசாயிகளை சந்திக்க மறுத்தார் பிரதமர் மோடி. விவசாயிகளில் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என பாஜக அரசு தெரிவித்தது.
கும்பகோணம் கதிராமங்கலத்தில் மக்களை போலீசார் அச்சுறுத்தி அங்கு மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. . இந்த நிலையில்தான் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு குறிப்பாக தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.