மதுரையில் சர்ரென்று பறக்கும் குட்டி விமானம்.. கடைசி நேர விசாரணையில் சகாயம்... விரைவில் ரிப்போர்ட்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்று முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், இன்று புறாக்கூடு மலையில் ரகசிய ஆய்வு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குட்டிவிமானம் மூலம் குவாரிகளில் ஆய்வு செய்து வரும் சகாயம்,r உயர் நீதிமன்றத்தில் சகாயம் தனது இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி விசாரணையை தொடங்கினார். 7 கட்ட விசாரணையில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன. அதன் மீது கள ஆய்வு நடத்திய சகாயம் தற்போது இறுதிக்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
ரகசிய ஆய்வு
அதிகாரி சகாயமும் அவரது குழுவை சேர்ந்த அதிகாரிகளும், மேலூர் அருகே உள்ள செம்மினிப்பட்டி புறாக்கூட்டு மலைக்கு காலை 8 மணிக்கு வந்தனர். சகாயம் வந்தது குறித்து, பத்திரிகைகளுக்கோ, மற்றவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. அவர் ரகசியமாக வந்து விவரங்களை சேகரித்து சென்றது தெரியவந்தது.
டாமின் அதிகாரிகளிடம் விசாரணை
புறாக்கூட்டு மலைக்கு சென்ற சகாயம், டாமின் அதிகாரிகளிடமும், வருவாய்துறையினரிடமும் விசாரணை நடத்தினார். இந்த மலையில் அரசு அனுமதியை மீறி எவ்வளவு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன என்ற விவரத்தையும் சேகரித்தார்.
ஆக்கிரமிப்பு யார்?
புறாக்கூட்டு மலை அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து உள்ளார்கள்? மற்றும் கண்மாய்கள் அழிக்கப்பட்டது தொடர்பான விவரங்களையும் சகாயம் சேகரித்தார். இறுதிக்கட்டமாக அவர், அனைத்து விவரங்களையும் சேகரித்து சென்றதாக கூறப்படுகிறது.
சிக்கல் கேள்விகள்
கிரானைட் வெட்டி எடுப்பதில் இருந்து, பாலீஷ் செய்து வெளியே அனுப்புவது வரை தொடர்புடைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் சகாயம் பல்வேறு சிக்கலான முக்கியக் கேள்விகள் அடங்கிய கடிதங்களை ஏற்கனவே அனுப்பியுள்ளார்.
விசாரணையில் தேக்கம்
சில துறைகள் சகாயம் சொன்ன தேதிக்குள் பதிலை அனுப்பிவிட்டன. ஆனால் ஒரு சில துறைகள் இன்னமும் பதில்களை அனுப்பாமல் பதுங்கி வருவதால் சகாயத்தின் விசாரணையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
கனிமவளத்துறைக்கு கடிவாளம்
டாமின் நிறுவனத்தின் எம்.டி., ஜி.எம் மற்றும் புவியியல், சுரங்கத் துறை அதிகாரிகள் பற்றிய ரகசிய விவரங்கள் சகாயம் கமிஷனுக்கு வந்து இருக்கிறதாம். அதற்குத் தகுந்தாற்போல சகாயம் கேள்விகளைத் தயார் செய்து அவர்களிடமும் அனுப்பி இருக்கிறார். இதனால் கனிமவள வட்டாரம் ஆடிப்போய்க் கிடக்கிறது. பதில் அனுப்புவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டவே உடனடியாக ரகசிய ஆய்வில் இன்று இறங்கியுள்ளார் சகாயம்.
குழுவினர் சகிதமாக
சகாயம் ஆய்விற்குப் பிறகு, அவரது குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் ஆல்பர்ட், ஜெய்சிங் ஞானதுரை, அய்யனார் ஆகியோர் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், மட்டங்கிப்பட்டி, வெள்ளலூர், கீழையூர் ஆகிய பகுதிகளில் இன்று தொடர்ந்து ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவர்களும் கிரானைட் குவாரிகளால் அழிக்கப்பட்ட கண்மாய்கள்-நீர் நிலைகளை பார்வையிட்டு அந்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
குட்டி விமானம்
மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட இடங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று ஓர் இடம் விடாமல் பறக்கும் குட்டி விமானம் மூலம் அளந்து அளந்து படம் பிடிக்கும் பணிகள் கடந்த சில தினங்களாகவே மும்முரமாக நடந்து வருகிறது.
தயாராகும் அறிக்கை
சகாயம் தனது இறுதி அறிக்கையை வரும் மார்ச் 12-ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் இடைவிடாமல் விசாரணை மேற்கொள்ள சகாயம் பல்வேறு தரப்பினருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை. எனவே 12ஆம் தேதி சகாயம் தனது முழுமையான விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.