சேலம் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விவரம்!
வீரபாண்டி தொகுதி:
இத்தொகுதியில் எஸ்.மனோன்மணி (52) என்ற பெண்மணி போட்டியிடுகிறார். வன்னியர் பிரிவை சேர்ந்தவரான இவரது கணவர் பெயர் சிவக்குமார். பாலாஜி சுகுமார் (மருத்துவர்) மற்றும் ஜெயதேவ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். எம்.ஏ. படித்துள்ளார். 1972ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். 2003 முதல் பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலர். பசுவநத்தம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நலச் சங்கத் தலைவராக பதவி வகித்தவர். இவர் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமியின் சகோதரி ஆவார்.
சேலம் வடக்கு:
இத்தொகுதியில், கே.ஆர்.சீனிவாசன் என்பவரின் மகன், கே.ஆர்.எஸ்.சரவணன் (42) போட்டியிடுகிறார். தாயார் பெயர், பானுமதி. எம்.ஏ. பி.எல். படித்துள்ள சரவணன், வன்னியர் ஜாதியை சேர்ந்தவர். இவருக்கு கவிதா என்ற மனைவியும், மஞ்சரி மற்றும் நக்ஷ்த்திரா ஆகிய மகள்களும் உள்ளனர். 1996ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். மாணவர் அணி செயலாளர், பகுதி இளைஞர் அணிச் செயலாளர். தற்போது, சேலம் மாநகர எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலர். சேலம் மாநகராட்சி 7-ஆவது வார்டு உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
சேலம் தெற்கு:
இத்தொகுதி வேட்பாளராக உள்ள ஏ.பி.சக்திவேல் தந்தை பெயர் பாலசுப்பிரமணியன் (லேட்). தாயார், தனலட்சுமி. 6.9.1971ல் பிறந்த சக்திவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பி.ஏ. எல்.எல்.பி படித்துள்ள சக்திவேல், முதலியார் ஜாதியை சேர்ந்தவர். வீட்டு உபயோகப் பொருள் விற்பனை தொழில் செய்து வருகிறார்.1987ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து வார்டுச் செயலாளர் மற்றும் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார். மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளராக உள்ளார். சேலம் அம்மாப்பேட்டை நகர கூட்டுறவு வங்கித் தலைவராகவும் பதவி வகித்தார்.
சேலம் மேற்கு:
இத்தொகுதியில் கோவிந்தன் மகன் வெங்கடாசலம் (52) போட்டியிடுகிறார். தாயார் பெயர் பெருமாயி. வன்னியர் ஜாதியை சேர்ந்த வெங்கடாசலம் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு வி.தனலட்சுமி என்ற மனைவியும், எஸ்.தேவி என்ற மகளும், ஜனார்த்தனன் என்ற மகனும் உள்ளனர். 1980ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் சூரமங்கலம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தொடர்ந்து மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிப் பொருளாளர், 21-ஆவது கோட்ட வட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது சேலம் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர். 2011-16-இல் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
ஆத்தூர் (தனி):
இத்தொகுதியில், மாரி மகன் சின்னதம்பி (55) போட்டியிடுகிறார். பி.ஏ. (மூன்றாம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி) பயின்றவர். இந்து ஆதிதிராவிடர் (பறையர்) வகுப்பை சேர்ந்த இவர், விவசாயம் மற்றும் மளிகை தொழில் செய்து வருகிறார். ராஜம்மாள் என்ற மனைவியுள்ள நிலையில், இவருக்கு குழந்தை இல்லை. 1980-ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார். 1998-இல் ஆத்தூர் துணைக் கழகச் செயலாளர், 2000-இல் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர், 2003-இல் ஆத்தூர் துணை கழகச் செயலாளர். 2015 முதல் ஆத்தூர் ஒன்றிய கழக அவைத் தலைவர். ஆத்தூர் ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
ஓமலூர்:
இத்தொகுதியில், சதாசிவம் மகன் எஸ்.வெற்றிவேல் (45) போட்டியிடுகிறார். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து கருப்பூர் பேரூர் கழக நிர்வாகியாகவும், செயலாளராகவும் இருந்த சதாசிவம், 10 வருடங்கள் முன்பு இறந்து விட்டார்.
பி.ஏ. ஆங்கிலம். படித்த இவருக்கு அருணா என்ற மனைவியும் தருண்வேல் என்ற மகனும், தருணிகா என்ற மகளும் உள்ளனர். 1991 முதல் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். கருப்பூர் பேரூர் கழக பொருளாளராக இருந்துள்ளார். தற்போது கருப்பூர் அதிமுக அவைத் தலைவர், கருப்பூர் பேரூராட்சித் தலைவர். வெள்ளாளக் கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர்.
எடப்பாடி:
இத்தொகுதியில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி (62) போட்டியிடுகிறார். தந்தை பெயர் கருப்பக்கவுண்டர். தாய் பெயர் தவுசாயம்மாள். பிறந்த தேதி: 12.3.1954. விவசாயத்தை குடும்ப தொழிலாக கொண்ட இவர் பிஎஸ்சி படித்துள்ளார். ராதா என்ற மனைவியும், மிதுன்குமார் என்ற மகனும் உள்ளனர்.
பழனிச்சாமி கடந்த 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற 1991, 1996, 2006, 2011 என ஐந்து சட்டசபை தேர்தல்களிலும் இவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டு 3 முறை வெற்றி பெற்றார். 1998, 1999 மற்றும் 2004-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்றார்.
ஆரம்பக் காலம் முதலே அதிமுக கட்சியில் உறுப்பினராக உள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு முதன்முதலாக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலர், அதிமுக கொள்கை பரப்புச் செயலர், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர், அதிமுக அமைப்புச் செயலர் என கட்சியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர், தற்போது சேலம் புறநகர் மாவட்டச் செயலராகவும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராகவும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
சங்ககிரி:
இத்தொகுதியில் சித்தன் மகன், எஸ்.ராஜா (49) போட்டியிடுகிறார். தாய் பெயர் அலமேலு. எம்.ஏ. பி.எட், படித்துள்ளார். லலிதா என்ற மனைவியும், பிரேம் என்ற மகனும் சுபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். வன்னியர் ஜாதியை சேர்ந்த இவரின் தொழில், ஜவுளி உற்பத்தி.
1985-ஆம் ஆண்டு முதல் அடிப்படை உறுப்பினரானார். மகுடஞ்சாவடி ஒன்றிய இளைஞரணித்தலைவர், மாவட்டக் கழகப் பிரதிநிதி, மகுடஞ்சாவடி ஒன்றிய கழக இணைச் செயலர், மகுடஞ்சாவடி ஒன்றிய கழகச் செயலர்.
கெங்கவல்லி (தனி):
இத்தொகுதியில் அங்கமுத்து, மகன், அ.மருதமுத்து (57) போட்டியிடுகிறார். எம்.ஏ.,பி.எல். படித்த இவர், ஆதிதிராவிடர் ஜாதியை சேர்ந்தவர். ராணி என்ற மனைவியும், தினேஷ் மற்றும் திவ்யா ஆகிய குழந்தைகளும் உள்ளனர். இவர், தலைவாசல் தெற்கு ஒன்றியத் துணைச் செயலாளராகும்.
ஏற்காடு (தனி):
இத்தொகுதியில், குணசேகர் மனைவி, ஜி.சித்ரா (35) போட்டியிடுகிறார். கலையரசி, சிந்து, கம்சலா என 3 மகள்கள்களும், ரஞ்சித் என்ற மகனும் உள்ளனர். 8-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சித்ரா, பாசறை கிளைச் செயலர் பதவியிலுள்ளார். மஞ்சக்குட்டை ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர், துணைத் தலைவர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
மேட்டூர் - செம்மலை
மேட்டூர் சட்டசபை தொகுதி வேட்பாளரான செம்மலை 1945ம் ஆண்டு பிறந்தவர். சேலம் எம். ஓலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் செம்பக்கவுண்டர், தாயார் பெயர் சின்னாத்தாள். பி.எஸ்.சி. பி.எல், படித்துள்ளார். வழக்கறிஞரான இவர் 1980, 85, 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். ஜெயலலிதா அமைச்சர்வையில் சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்டார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செம்மலைக்கு தற்போது 62 வயதாகிறது. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், வெற்றிச்செல்வி, மலர்க்கொடி என இரு மகள்களும், எழில்அமுதன், விஜயராகவன் என்று இரு மகன்களும் உள்ளனர்.