”அட அது அவரு இல்லையாமே” - அஜீத் சாயலில் பைக்கில் வந்தவரால் சேலத்தில் குவிந்த ரசிகர்கள்!
சேலம்: சேலத்தில் நடிகர் அஜீத் போன்ற சாயலில் பைக்கில் வந்த ஒருவரால் ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் அஜீத் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார்.
நாளை தீபாவளியை முன்னிட்டு நடிகர் அஜீத் நடித்த "வேதாளம்" படம் வெளியாகிறது. அதையொட்டி திருப்பதிக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை தரிசனம்:
அதுபோன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பாதுகாவலர்களுடன் ஆத்தூர் - சேலம் வழியாக பெங்களூர் செல்வதாக தகவல் வெளியானது. அதனால் நேற்று காலை 11 மணி முதல் ரசிகர்கள் காத்திருந்தனர்.
போலீசார் குவிப்பு:
இதனால் நத்தக்கரை, மேட்டுப்பட்டி, டோல்கேட் ஆகிய பகுதிகளில் ரசிகர்களும் பொதுமக்களும் குவிந்ததால் அங்கு வாழப்பாடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அஜீத் வந்துட்டாரு:
பலமணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் மதியம் 3 மணி அளவில் நத்தக்கரை டோல்கேட் பகுதியில் நடிகர் அஜீத் சாயலில் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பார்த்து ரசிகர்கள் அஜீத் தான் வந்து விட்டார் என்று நினைத்து ஆரவாரம் செய்தனர்.
ஹைய்யோ அவர் இல்லை:
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால் கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த சேலம் மாவட்ட அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகி காமராஜ், தான் சென்னைக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும், அஜீத் சென்னையில் இருப்பதாகவும் திருவண்ணாமலையில் இருந்து வந்த நபர் அஜீத் சாயலில் இருக்கும் வேறு நபர் எனவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் ரசிகர்களிடம் எடுத்துச்சொல்லியதை அடுத்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.