கள்ளக்காதலுக்காக 7 மாத குழந்தை கொலை – போலீசில் சிக்கிய தாய்
சேலம்: சேலத்தில் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் 7 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் வாய்க்கால் பட்டறை ராமமூர்த்தி புதூர் பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் சமையல் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயா.
இவர்களுக்கு பிரவீன்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஜெயா இறந்து விட்டார்.
இதே போல் சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி கமலா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் என மொத்தம் 4 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் உன்னிகிருஷ்ணனுக்கும், கமலாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமலா தனது 4 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு உன்னிகிருஷ்ணனுடன் வந்து விட்டார்.
இவர்கள் 2 பேரும் வாய்க்கால் பட்டறை பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு கோகிலவாணி என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.
சமையல் வேலைக்கு வெளியூர் செல்லும் உன்னிகிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
இதே போல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக வெளியில் சென்ற உன்னிகிருஷ்ணன் மீண்டும் நேற்று இரவு வீடு திரும்பினார்.
அப்போது உன்னிகிருஷ்ணனுக்கும், கமலாவுக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உன்னிகிருஷ்ணன் கமலாவின் உடமைகளை எடுத்து கொடுத்து கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்.
இதில் மனம் உடைந்த கமலா தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தை கோகிலவாணியின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலை உன்னிகிருஷ்ணன் வீட்டின் முன்பு வைத்து விட்டு தப்பி சென்று விட்டார்.
சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியவந்தது. எனவே குழந்தை கொலை செய்யப்பட்டதை கண்டறிந்தனர்.
பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குழந்தையை கொலை செய்த தாய் கமலாவை போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரை அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் வெளியானது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெற்ற குழந்தையை குடும்ப தகராறு காரணமாக தாயே கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.