நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சேலத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சேலத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர்.
சேலம்: மருத்துவ படிப்புக்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சேலத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர்.
நீட் என்ற தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெறும் வகையில் அந்த தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படும் என்பதால் அந்த தேர்வுக்கு தமிழகம், புதுவையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் விரக்தியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையேஎ சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் இன்று தொடங்கியுள்ளனர்.