ஆசிரியை புடவை மாற்றுவதை படம் பிடித்த கணவரின் அண்ணி.. அதைக் காட்டி மிரட்டிய அதிமுக கவுன்சிலர்
சேலம்: சேலம் மாநகராட்சி அதிமுக கவன்சிலர் ஆதி மாதவன் மீதும், தனது அண்ணன் மனைவி மீதும் சேலத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை பரபரப்பான புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் புகார் பதிவு செய்ய சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். ஆனால் அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மகளிர் நீதிமன்றத்தை அணுகி ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
கடந்த 2011 நவம்பர் மாதம் எனது 3வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் மருத்துவமனைக்கு அவனை எடுத்துச் சென்றோம். மருத்துவமனை செல்லும் வழியில் எனது மகன் வாந்தி எடுத்தும், மலக்கழிவு ஏற்பட்டதாலும், நான் சேலையை மாற்றுவதற்காக அருகில் உள்ள எனது கணவரின் அண்ணன் வீட்டிற்கு சென்றேன். பின்பு எனது குழந்தையை எனது கணவரின் அண்ணனிடம் கொடுத்து அனுப்பி விட்டு, புடவை மாற்றுவதற்கு எனது கணவரின் அண்ணன் மனைவி தேவி ஒரு புடவை கொடுத்தார். அப்பொழுது நான் புடவை மாற்றிக் கொண்டிருக்கும்போது தேவிக்கு ஒரு போன் வந்ததால் அவர் பத்து நிமிடம் போன் பேசினார். அப்பொழுது அண்ணன் மனைவி தேவியை தவிர மற்ற யாரும் வீட்டில் இல்லை.
இந்த நிலையில், கவுன்சிலர் ஆதிமாதவன் என்பவர் (சேலம் மாநகராட்சி 30வது வார்டு அதிமுக கவுன்சிலர்) என்னையும், எனது கணவரையும் அழைத்து அவருடைய செல்போனில் நான் புடவையை மாற்றும் காட்சியை எங்களிடம் காண்பித்தார். அதனை பார்த்தவுடன் நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது. நான் புடவை மாற்றும்போது எனது கணவரின் அண்ணன் மனைவி தேவி எனக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளார் என்று.
செல்போனில் உள்ள வீடியோ கிளிப்பை செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அனைவருக்கும் அனுப்பி விடுவேன். அதை நான் செய்யாமல் இருக்க வேண்டுமானால், இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் எனக்கு ஒரு பெருந்தொகை தரவேண்டும் என்று கூறினார் ஆதி மாதவன்.
மேலும், தான் மிரட்டியதை வெளியில் சொன்னால், இரவு நேரத்தில் என் வீட்டின் முன்பு 2 ஆட்களை அமர வைத்து விட்டு போலீசுக்கு போன் செய்து அவர்களை நான் விபசாரத்துக்கு அழைத்ததாக என் மீது பொய் வழக்கு போட செய்து விடுவேன் என்றும், எனது கணவரிடம், உன் மனைவி மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக எல்லாரிடமும் கூறி விடுவேன் என்றும் ஆதி மாதவன் மிரட்டினார்.
இந்த நிலையில், 10.4.2014 ம் தேதியன்று என்னுடைய ஆபாச படம் இணையதளத்தில் வந்தது எனக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த நான். ஆதிமாதவன் ஏற்கனவே கூறியபடி இணையதளத்தில் வீடியோ கிளிப்பை வெளியிட்டு இருப்பார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. நான், இது சம்பந்தமாக 10.4.2014 ம் தேதி அன்று காவல்துறை ஆணையாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தேன். அதில் நான் சேலை மாற்றியபோது என்னை, ஆபாச படம் பிடித்து வெளியிட்ட தேவியையும், என்னையும், எனது கணவரையும், பணம் கேட்டு மிரட்டிய ஆதி மாதவனையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் புகார் கொடுத்தேன்.
இதையடுத்து காவல் துறையினர் ஆதிமாதவனையும், தேவியையும் அழைத்து விசாரித்தார்கள். பின்னர் 14.4.2014 ம் தேதி அன்று என்னை செவ்வாய்ப்பேட்டை போலீசார் அழைத்து என்னிடம் புதிதாக அவர்கள் சொல்லும்படி ஒரு புகார் மனு எழுதிக்கொடு என்று கூறி மிரட்டியதால் நான் பயந்துகொண்டு புதிதாக ஒரு புகார் மனு எழுதிக்கொடுத்தேன்.
ஆனால், 10.4.2014 ம் தேதியன்று கொடுத்த புகார் மனுவிற்கும், இந்த புகார் மனுவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மேலும், இது சம்பந்தமாக நீ தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்தால், உன் மீது ஏதாவது ஒரு கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினர். அதன்படி வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத நபர்களை கைது செய்தார்கள். இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.
தேவி மற்றும் ஆதிமாதவன் செயல்களால் நான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டும், சமுதாயத்தில் நான் தலைகாட்ட முடியாத ஒரு அசிங்க நிலைக்கு தள்ளப்பட்டும், அதனால் நான் பெருத்த மன உளைச்சலும், மனகஷ்டத்திற்கும் நானும், எனது குடும்பமும் ஆளாகி உள்ளோம். தற்போது நான் கொடுத்த புகாருக்கு மாறாக எனது வழக்கு சென்று கொண்டுள்ளது.
ஆகவே, கோர்ட்டார் அவர்கள் எனது மனுவை ஏற்றுக்கொண்டு எனக்கு தெரியாமல் என்னை ஆபாச படம் பிடித்த தேவி, என்னை பணம் கேட்டு மிரட்டியும், அவருடைய ஆசைக்கு அடிபணிய வேண்டுமென்று மிரட்டிய ஆதிமாதவன் மீதும் நான் 10.4.2014 ம் தேதியன்று கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் மனதளவில் பாதிக்கப்பட்ட எனக்கு நீதி வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கலைவாணி விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் ராஜேஸ்வரியின் புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
கோர்ட் தலையில் குட்டியதைத் தொடர்ந்து தற்போது செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வேகம் வேகமாக தேவி, ஆதி மாதவன் மீது 66இ, 67 (தகவல் தொழில் நுட்ப சட்டம்), 387 (இந்திய தண்டனை சட்டம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியையை ஆபாசமாக படம் பிடித்த அவரது அண்ணி, அதைக் காட்டி மிரட்டிய அதிமுக கவுன்சிலரின் செயல் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.