அப்துல் கலாமை கவுரவிக்க தபால்தலைகள்: அஞ்சல்துறை அறிவிப்பு
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி அவரது நினைவாக நான்கு தபால் தலைகளை வெளியிடவுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
உடல் நலக்குறைவினால் காலமான அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பீகாரில் உள்ள விவசாய கல்லூரி ஒன்று, கலாம் பெயரை கல்லூரிக்கு சூட்டப்போவதாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் அவரது வாழ்க்கை வரலாறை பாடமாக நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்கள் கலாமை கவுரவிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது.
இந்த நிலையில் தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பலரிடம் இருந்து கோரிக்கை வந்திருப்பதாக சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அஞ்சல் துறை இயக்குனரிடம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். அப்துல் கலாமின் பன்முகத் தன்மையை காட்டும் வகையிலும், அவரது மறைவை நினைவு கூரும் வகையிலும் இந்த தபால் தலைகள் இருக்கும் என்றும் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.