ஒரு லாரி மணல் விலை ரூ.17,000: தனியார் கொள்ளையால் கட்டுமானப்பணிகள் பாதிப்பு
சென்னை: அரசு நிர்ணயித்த விலை யூனிட்டுக்கு ரூ.312 என்று இருக்கும்போது, சென்னையில் ஒரு லாரி மணல் ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தனியார் மணல் கட்டண கொள்ளையால் வரலாறு காணாத வகையில் மணல் விலை அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடந்த மணல் கொள்ளையை தடுப்பதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே நேரடியாக மணல் குவாரிகளை அமைத்து, பொதுப்பணித்துறை மூலம் ஆற்று மணலை விற்பனை செய்து வந்தது. இதனால் சென்னையில்கூட ஒரு லாரி லோடு மணல் ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்படைந்தது.
இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, மீண்டும் மணல் விற்பனை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஆறுகளில் 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டதுடன், மணல் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
இதனிடையே, ஆறுகளில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்றும், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆற்று மணல் அள்ளுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, ஆறுகளில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டு, தனியாரிடம் இருந்த மணல் குவாரிகள் பொதுப்பணித்துறை வசம் கொண்டுவரப்பட்டது.
பொதுப்பணித்துறை மூலம் தற்போது ஒரு யூனிட் மணல் 312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், பொதுமக்கள் நேரடியாக சென்று மணலை இந்த விலைக்கு வாங்க முடிவதில்லை. ஏனென்றால், அரசு மணல் குவாரிகளில் இருந்து லோடு கான்டிராக்ட் என்ற பெயரில் தனியாருக்கு மணல் விற்கப்படுகிறது. அவர்களிடம் இருந்துதான் பொதுமக்களும், லாரி உரிமையாளர்களும் மணலை வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அங்கு ஒரு யூனிட் மணல் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் நேற்று ஒரு யூனிட் ஆற்று மணல் 4300 ரூபாய்க்கும், ஒரு லாரி மணல் 17 ஆயிரம் ரூபாய்க்கும் (4 யூனிட்) விற்பனை செய்யப்பட்டது.
எனவே, அரசு மணல் குவாரிகளில் இருந்து நேரடியாக மணல் வாங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்துள்ள பொதுமக்கள், அதாவது, வீடுகட்டுவதற்கான அனுமதியை காட்டினாலே, அதற்கு தேவையான மணலை நிர்ணயித்த விலையில் அரசு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல், சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.330க்கும், செங்கல் ஒன்று ரூ.6.50க்கும் விற்பனையானது. இந்த வரலாறு காணாத விலை உயர்வால், புதிய வீடு கட்டுவது கனவாகிப்போகுமோ என்ற சோகத்தில் நடுத்த மக்கள் இருக்கின்றனர்.