சாரதா நிதிநிறுவன முறைகேடு: ப.சிதம்பரம் மனைவி நளினிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்
சென்னை: பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்கத்தின் சாரதா நிதிநிறுவன முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி சுமார் ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம். சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது.
இந்திய முதலீட்டுச் சட்டப்படி 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட செபி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சாரதா நிதி நிறுவனம் அதை கண்டுகொள்ளவில்லை. 2009-ல் 'செபி' நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, 'செபி'யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். ஏமாற்றிய சாரதா அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கொந்தளித்தனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க அரசு விசாரணைக் கமிஷன் அமைக்க முயற்சித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் சிபிஐ விசரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் சாரதா நிதி நிறுவன அதிபர் சுதிப்த சென் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தன்னை மிரட்டி பண ஆதாயம் அடைந்த பல அரசியல் தலைவர்கள் விவரம் இடம்பெற்றிருந்தது.
அக்கடிதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்தும் சுதிப்த சென் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த மனோரஞ்சனா சிங் என்பவர் டிவி நிறுவனம் தொடங்க ரூ42 கோடி தர வேண்டும் என சுதிப்த சென்னிடம் நளினி வலியுறுத்தியிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தையும் நளினி தயாரித்திருந்தார். இதற்காக நளினிக்கு வழக்கறிஞர் கட்டணமாக ரூ1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் மனோரஞ்சனா சிங்குக்கும் ரூ25 கோடி முதல் கட்டமாக கொடுத்தேன் என அதில் விவரித்திருந்தார் சுதிப்த சென்.
இது தொடர்பாக நளினி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு தற்போது அமலாக்கப் பிரிவு நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.