சமக இனி எப்போதும் தனித்தே போட்டியிடும் - சரத்குமார்
ஆர்.கே. நகரில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமக தனித்து போட்டியிடுகிறது. இனி வரும் காலங்களிலும் சமக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ஆர். கே. நகரில் எங்களின் தனித்துவத்தை நிரூபிப்போம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது.
திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, என ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி நிலவுகிறது.
சமக தனித்து போட்டி
சமத்துவ மக்கள் கட்சியும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சரத்குமார் நேற்று அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.அந்தோணி சேவியரை வேட்பாளராக அறிவிக்கிறேன். வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராயபுரம் கே.விஜயன் மாற்று வேட்பாளராக இருப்பார் என்று கூறினார்.
வேட்புமனு தாக்கல்
இன்று சமக வேட்பாளர் அந்தோணி சேவியர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், சமக இனி எப்போதும் தனித்தே போட்டியிடும் என்று கூறினார்.
மக்கள் ஆதரவு
எங்களின் கட்சி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தனித்தே போட்டியிட முடிவு செய்ததாக கூறினார் சரத்குமார். தனியாக போட்டியிட்டு எங்களின் தனித்துவத்தை நிரூபிப்போம் என்றும் சரத்குமார் கூறினார். மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவு இல்லையே
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு சென்று ஆதரவு அளித்தார் சரத்குமார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தொகுதியை சுற்றி வந்த அவர் ஆதரவு வேறு தேர்தல் கூட்டணி வேறு என்று கூறிவிட்டு தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் சரத்குமார். ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தனது கட்சி வேட்பாளரை களமிறக்கியுள்ளார் சரத்குமார்.