அதிமுக கூட்டணியில் திருச்செந்தூரில் சரத்குமார், திருவாடனையில் கருணாஸ் போட்டி!
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் ஆர் சரத்குமார் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
சரத்குமார் கட்சிக்கு கடந்த முறை இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சமீபத்தில் அக்கட்சி இரண்டாக உடைந்தது. எனவே இப்போது ஒரு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
கருணாஸ்
சமீபத்தில் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் அமைப்புத் தொடங்கிய நடிகர் கருணாஸ், சமீபத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
அவருக்கும் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடனை தொகுதியில் தனது முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போட்டியிடுகிறார் கருணாஸ்.
சரத்குமார், கருணாஸ் இருவரும் நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டு கடுமையாக மோதியவர்கள். ஆனால் இந்த இருவரும் இப்போது அதிமுக அணியில் ஒருவரையொருவர் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருவருமே இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள்.