சாலை அமைத்து தரக் கோரி தென்காசியில் சரத்குமார் அலுவலகம் முற்றுகை
தென்காசி: சாலை அமைத்து தரக் கோரி தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சரத்குமார் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தென்காசி 19-ஆவது வார்டு சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் இணைப்பு சாலை அமைத்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
அப்போது நகராட்சி சாலை அமைக்கவில்லையெனில் தனது சொந்த செலவில் அமைத்து தருவதாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.ஆனால் இது வரை அந்த இணைப்பு சாலைக்கு தீர்வு கிடைத்த பாடில்லை.
இதனைத்தொடர்ந்து அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும்,இன்று தென்காசிக்கு சட்டமன்ற உறுப்பினர் சரத் குமார் வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இதனைக்கண்ட அலுவலக மேலாளர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது குடும்ப அட்டைகளையும் ஒப்படைக்க கொண்டு வந்தனர். ஆனால் யாரும் இல்லாததால் அவர்கள் வேதனையோடு திரும்பி சென்றனர்.