ஒரு சீட் கூட கொடுக்கல... அதிமுகவை எதிர்த்து களமிறங்கும் சமத்துவ மக்கள் கட்சி
தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக கூட்டணியில் ஒரு சீட் கூட ஓதுக்கப்படாததால், தூத்துக்குடியில் அதிமுகவை எதிர்த்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் 17வது வார்டு சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் முத்துமதி என்பவர் இரட்டை இலை சின்னத்தில் நி்ன்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி பகுதியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் ச.ம.க.வை சேர்ந்த முத்துமதி அதே வார்டில் கூட்டணி கட்சியான அதிமுகவை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதே போல் 37வது வார்டில் மேற்கு பகுதி செயலர் கனிராமன், 49 வார்டில் மாநில பேச்சாளர் சரத்பாலா, 54வது வார்டில் மாநில இளைஞரணி துணை செயலர் கணேசன், 18வது வார்டில் மாநில தொண்டரணி லிங்கராஜூ ஆகியோரும் அதிமுகவை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சி திருச்செந்தூர், விளாத்திகுளம், ஏரல், சாயர்புரம் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் ச.ம.க.விற்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தத் தேர்தலில் ச.ம.க. அதிமுக கூட்டணியில் இருக்கிறதா, இல்லையா என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ச.ம.க.வினர் தனியாக தேர்தல் களத்தில் இறங்கி அதிமுகவுக்கு போட்டியாக வேட்பு மனு தாக்கல் செய்ய போவதா தெரிவித்துள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் ச.ம.க.வினர் அதிமுக வேட்பாளர்களுக்கு போட்டியாக களம் இறங்க போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் சமக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை எதிர் கொண்டு ஜெயிக்க வேண்டிய நிலையில் அதிமுகவினர் உள்ளனர்.