ஜிஎஸ்டி எஃபெக்ட்... சேலை, ரெடிமேட் ஆடைகளின் விலை கிடுகிடு உயர்வு?
ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்பட்டவுடன் சேலைகள், அழகு சாதன பொருள்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: ஜிஎஸ்டி மசோதா நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் நிலையில் சேலைகள், ரெடிமேட் ஆடைகளின் விலை உயரும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் ஒரே வரிக்கு வித்திடும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி சட்டமானது வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
பொருள்கள் மீதான உத்தேச வரிகளின் படி, ஆடைகளுக்கு 5 சதவீத வரி விதிப்பும், ரெடிமேட் ஆடைகளுக்கு 12 சதவீதமும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் அவற்றின் விலை ரூ.1000 வரை உயரலாம்.
சின்தெடிக் மற்றும் கைத்தறி ஆடைகளுக்கு 18 சதவீதமும், இயற்கை இழைகளுக்கு 5 சதவீதமும் வரியானது அதிகரிக்கப்படுகிறது. இந்த வரி உயர்வு தாக்கம் சேலைகளில்
விலையேற்றத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து சூரத் ஜவுளி வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் மனோஜ் அகர்வால் கூறுகையில், சேலைகள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது. அவ்வாறு விதித்தால் சேலைகளின் விலை உயரும்.
நாங்கள் பழைய வரி விதிப்பு நடைமுறையையே விரும்புகிறோம். ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெறவில்லையெனில், மற்ற சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளோம். பெரும்பாலான மாநிலங்களில் சேலைகளுக்கு வாட் வரி கூட விதிப்பதில்லை என்றார் அவர்.
அதேவேளையில் குங்குமம், சாந்து பொட்டு, ஸ்டிக்கர் பொட்டுகள், வளையல்கள், கண் மை (காஜல்) ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் பேனா வடிவிலான காஜல்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பெண்களுக்கு பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.