அந்நிய செலாவணி வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜரான சசிகலா... 4வது வழக்கிலும் குற்றச்சாட்டுகள் பதிவு!
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று மீண்டும் ஆஜரான சசிகலா மீது 4வது வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை : அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது 4வது வழக்கில் இன்றும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன், ஜெஜெ டிவி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் தற்போது எழும்பூர் 1-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
4 வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சியில் சசிகலா கடந்த ஜுன் மாதம் 21ம் தேதி ஆஜரானார். அப்போது சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீண்டும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது அவரிடம் எஞ்சிய கேள்விகள் கேட்கப்பட்டது அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று பாஸ்கரன் மீதும் விசாரணையின் போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.