சசிகலா பேனர்கள் அகற்றம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இந்த விஷயம் தெரியுமா?
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. சசிகலா பேனரை கிழித்த நபரையே அடித்து துவைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்களை அகற்றி அதிமுக தலைமைக் கழகத்தின் புனிதத்தை காப்பாற்றுமாறு ஓபிஎஸ் அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் நேற்று முன் தினம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எடப்பாடி அணி மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சசிகலா பேனர்கள் அகற்றம்
இதைத்தொடர்ந்து இன்று காலை விடிந்தும் விடியாததுமாக சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டன. ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்திருந்த நிலையில் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
அப்போ அடித்த துவைத்த அமைச்சர்
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் சசிகலாவை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை அக்கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்த நபர் ஒருவர் கிழித்து வீசினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த நபரை அடித்து துவைத்தார்.
வைரலாக பரவிய வீடியோ
உனக்கும் சின்னம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்றும் யார் பேனரை கிழிக்க கூறியது என்று கூறி சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவியது.
சசி அவுட், ஜெ. இன்
இந்நிலையில் சசிகலாவின் பேனர்கள் இன்று ஊர் அறிய அவரது ஆதரவு அணியினராலேயே கிழித்தெறியப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர பாலாஜிக்கு தெரியுமா?
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன சொல்லப் போகிறார் என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரை சமூக வலைதளங்களில் மக்கள் விளாசி வருகின்றனர்.