ஜெ. நாடித் துடிப்பு குறைய குறைய ஒப்பாரியே வைத்த சசிகலா... ஒரேபோடு போட்ட ராஜேந்திர பாலாஜி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் நாடித்துடிப்பு குறையவதை கண்டதும், அவருடன் இருந்த சசிகலாவின் அழுகை அதிகரித்தது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அது பலனளிக்காமல் அவரது நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கியதுமே அவரது தோழி சசிகலாவின் அழுகை அதிகரித்தது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
ஜெயலலிதா கடைசியாகக் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் அவர் கையசைத்தது வழக்கமான ஒன்றுதான் என்று நினைத்தோம். ஆனால் அவர் விடைப்பெற்றுச் செல்வார் என்று கனவிலும் நினைக்க வில்லை.
எம்ஜிஆர் நினைவிடத்தை...
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு போயஸ் தோட்டம் திரும்பிய ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தைப் பார்த்து வணங்கினார். பின்னர் அவர் அந்த வழித்தடத்தில் திரும்பி வராமலேயே போய்விட்டார்.
மயங்கிய நிலையில்...
செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையை அடைந்தார். அதிர்ச்சி அடைந்த சசிகலாவும், ஜெயலலிதாவுடன் அவர் குழந்தை பருவத்தில் இருந்து வசித்து வரும் ராஜம்மாளும், ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
100 படம் வந்திருக்கும்
அவருக்கு அவசர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு மயக்கம் தெளிந்தார். ஜெயலலிதா இறந்து விடுவார் என்று தெரிந்திருந்தால் 100 புகைப்படங்களை வெளியிட்டிருப்பர்.
அழுகையை கட்டுப்படுத்த முடியலை
ஜெயலலிதா பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்றுதான் தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் நினைத்தனர். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவின் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதும் உடனிருந்த சசிகலாவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நாங்களும் அழுதோம்
சசிகலா அழுது புரண்டதை பார்த்து அங்கிருந்த அதிமுக அமைச்சர்களான நாங்களும் அழுதோம். அன்றிரவு 11.35 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனையும், எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து ஜெயலலிதா மரணச் செய்தியை வெளியிட்டனர்.
அரசியலுக்காக
கடந்த 75 நாள்களாக ஜெயலலிதாவின் உயிரை காக்க பல்வேறு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் அவர் மாரடைப்பு காரணமாகதான் இறந்தார் என்பதை தமிழக மக்கள் அறிவர். முதல்வர் பதவியும், அமைச்சர் பதவியும், கட்சிப் பதவியும் பறிபோனதால் பதறிய ஓ. பன்னீர்செல்வம் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது தரப்பினர் ஜனாதிபதியிடம் சென்று கோரிக்கை வைக்கின்றனர்.
ஆதாயம் தேட பார்க்கும் திமுக
இந்த அதிமுக கோஷ்டி பூசலில் அரசியல் ஆதாயம் தேட முயலும் திமுகவோ ஜெயலலிதாவை குற்றவாளி என்று தரம்தாழ்ந்த அரசியலை நடத்துகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறும் திமுக, அதன் தலைவரின் ஆரம்பகால் வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.
அதிமுகவுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்கள்
சைக்கிள் கூட வாங்கக் கூட காசில்லாத கருணாநிதிக்கு இன்றைக்கு லட்சம் கோடி கணக்கில் சொத்து இருப்பது எப்படி என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கத் தயாரா? சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்றிருந்தால் அக்கட்சியைச் சேர்ந்த 50 எம்எல்ஏ-க்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களை மு.க.ஸ்டாலின் இழந்திருப்பார்.
ஸ்டாலின் கனவு பலிக்காது
எங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க துடிக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது. 89 திமுக எம்எல்ஏக்களில் 50 பேர் அதிமுகவிற்கு வரத் தயாராக உள்ளனர்.தீபாவும், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களளும் மீண்டும் தாய்க் கழகத்துக்குத் திரும்புவார்கள். எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
முதல்வராக முடியாது
மு.க.ஸ்டாலினின் ஜாதகத்தில் அவர் முதல்வராகும் வாய்ப்பே இல்லை. அதனால் அதற்கான பணிகளில் அவர் ஈடுபட வேண்டாம். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.