எடப்பாடி வெற்றியை கொண்டாடி தீர்த்த சசி கோஷ்டி! மினி கூவத்துரானது போயஸ் கார்டன்!!
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதை போயஸ் கார்டனில் நேற்று இரவு உற்சாகமாக கொண்டாடியது சசிகலா அணி.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் நேற்று இரவு தடபுடலாக விருந்து கொடுத்து கொண்டாடி தீர்த்திருக்கிறது சசிகலா கோஷ்டி.
ஜெயலலிதாவுக்கு சொந்தமானது சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் பங்களா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது தோழி சசிகலா வசமானது இந்த பங்களா.
முதல்வராக எடப்பாடி
தற்போது சசிகலா சிறைக்குப் போயுள்ள நிலையில் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இந்த பங்களாவை பயன்படுத்தி வருகின்றனர். சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி உள்ளார்.
எடப்பாடி வெற்றி
எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வெற்றி பெற்றுள்ளார். இதனால் சசிகலா தரப்பு உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.
கூவத்தூர் ரிசார்ட்
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சசிகலா தரப்பினர் அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில்தான் அடைத்து வைத்திருந்தனர். சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக அந்த ரிசார்ட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போயஸ் கார்டன்
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெற்றி பெற்றதை சசிகலா தரப்பு கொண்டாடி தீர்த்துள்ளது. கோல்டன் பே ரிசார்ட் மூடப்பட்டதால் போயஸ் கார்டனை மினி கூவத்தூராக மாற்றி தடபுடல் விருந்துகளுடன் அமர்க்களப்படுத்தியதாம் சசிகலா தரப்பு.