சசிகலா குடும்பத்தை முதல்ல நீக்குங்க.. பிறகுதான் பேச்சுவார்த்தை.. ஓ.பி.எஸ். அணி அதிரடி!
சென்னை: சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தாரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கோஷ்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் இல்லத்தில் முனுசாமி அளித்த பேட்டியில், எங்களது கோரிக்கை முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி கிடையாது. ஆனால் சசிகலா, தினகரனுடன் யாரும் தொடர்பு வைக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலிலான அதிமுகவினர் அறிவிக்க வேண்டும்.
ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இந்த 2 கோரிக்கைகளையும் எடப்பாடி கோஷ்டி நிறைவேற்ற வேண்டும். மற்றபடி எடப்பாடி பழனிச்சாமி அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை.
சசிகலா பொதுச்செயலர் என்ற பிரமாண பத்திரத்தை எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி வாபஸ் பெற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என இன்று தம்பித்துரை பேட்டியளித்துள்ளார். எடப்பாடி கோஷ்டியிடம் முதல்வர் பதவியை நாங்கள் கேட்கவில்லை. தம்பிதுரை தான்தோன்றித்தனமாக பேசிவருகிறார். இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.