போயஸில் ஜெ. மயங்கிக் கிடந்ததை தமிழக அரசு அறிக்கையில் சேர்த்தது யார்? பரபர பின்னணி
சென்னை போயஸ் கார்டனில் செப்.22-ல் ஜெயலலிதா மயங்கிக் கிடந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தமிழக அரசு அறிக்கையும் உறுதி செய்திருப்பது சசிகலா குடும்பத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளத
சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயங்கிக் கிடந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தமிழக அரசு அறிக்கையில் இடம்பெற்றிருப்பது சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விளக்கம் தருகிறோம் என தமிழக அரசு அறிக்கைகளை வெளியிட்டது. இந்த அறிக்கைகள்தான் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.
அதுவும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயக்கமடைந்திருந்தார். அந்த நிலையில்தான் ஆம்புலன்ஸில் ஏற்றினோம் என்ற தகவல் பெரும் பிரளயத்தைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் இருந்து ரிப்போர்ட்
அப்பல்லோவின் அறிக்கை, எய்ம்ஸ் அறிக்கை இரண்டையும் வைத்து தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கையை டெல்லியில் இருந்தபடியே சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தயார் செய்தார். இந்த அறிக்கையை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் அனுப்பி வைத்தார்.
மயக்க நிலையும் சேர்ப்பு
அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளைப் பார்த்த கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசு அறிக்கையில் ஒரு திருத்தம் செய்தார். அதில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் மயக்கமடைந்த நிலையில் இருந்தார் என்பதையும் சேர்த்துவிட்டார். தமிழக அரசே இப்படி அதிகாரப்பூர்வமாக சொன்னால் யார் யாருக்கு சிக்கல் வரும் என்பதையும் அவர் தெரிந்தே கிரிஜா வைத்தியநாதன் சேர்த்தார் என கூறப்படுகிறது.
கறுப்பு ஆடுகள்
அத்துடன் டெல்லியில் ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்னதாகே தமிழக அரசின் செய்தித் தொடர்பு துறை மூலமாக அனைத்து ஊடகங்களுக்கும் உடனே அனுப்பி வைக்கவும் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால் சில கறுப்பு ஆடுகள் இப்படி ஒரு வாசகம் இருக்கிறதே என சசிகலா உறவினர்களுக்கு போட்டுக் கொடுத்தனர்.
அதிர்ச்சியில் சசி குடும்பம்
தினகரனும் திவாகரனும் இந்த வாசகத்தை எடுக்க வைக்க படாதபாடுபட்டனர். ஆனால் இந்த முயற்சி எதுவும் கை கூடவில்லை. இதனால் தற்போது அப்பல்லோ மட்டுமல்ல தமிழக அரசும் உறுதியாக சொல்லிவிட்டது சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா மயங்கிக் கிடந்தார் என்பதை. இது சசிகலா குடும்பத்தை அதிர்ச்சியடை வைத்துள்ளது. இந்த மயக்கம் எதனால் ஏற்பட்டது? அல்லது ஏற்படுத்தப்பட்டதா? என்பது உரிய விசாரணையில் தெரியவரும்.