தகுதி நீக்கம்: கோர்ட்டுக்கு போக சொன்னா குறட்டை விடுவதா? கோட்டை விட்ட தினகரனுக்கு குட்டு வைத்த சசி!
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தினகரன் கோட்டை விட்டுவிட்டதாக குமுறியிருக்கிறார் சசிகலா.
Recommended Video
சென்னை: எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும் என அறிவுறுத்தியும் தினகரன் அதை செய்யாமல் இருந்துவிட்டாரே... என பெங்களூரு சிறையில் குமுறியிருக்கிறார் சசிகலா.
பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கியதைத் தொடர்ந்து, 2-வது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகரின் இப்படியொரு நடவடிக்கை எடுப்பார் என்பதை அறிந்துதான் அவரையே முதல்வராக முன்மொழிந்தார் திவாகரன்.
ஆனால் தினகரனின் சில செயல்பாடுகளால்தான் இப்படியொரு பின்னடைவு ஏற்பட்டது எனக் குமுறியிருக்கிறார் சசிகலா. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்ததற்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்தப் பதிலையும் சொல்லவில்லை.
உற்சாக எடப்பாடி
ஆனால் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சிக்கான ஆபத்துக்களைக் குறைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. சட்டரீதியாக அவர்கள் போராடி வருவதற்குள் சபையில் பலத்தை நிரூபித்துவிட முடியும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடியார்.
தினகரன் மீது கோபம்
தகுதி நீக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் தினகரன். மன்னார்குடி சொந்தங்களுக்கு எதிராக எடப்பாடி நடத்தும் தர்பாரால் கொதிப்பில் இருக்கிறார் சசிகலா. ஆனால் அவருடைய கோபம் முழுக்க தினகரன் மீதுதான் இருக்கிறது என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
தடை உத்தரவு வாங்கலையே...
"எம்.எல்.ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார் சசிகலா. இதற்கு எதிராக சில சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதை விரைந்து செய்வதற்கு தினகரன் தரப்பு தவறிவிட்டது. இதைப் பற்றி தன்னை சந்திக்க வந்தவர்களிடம் பேசிய சசிகலா, ' எடப்பாடியின் பேச்சைக் கேட்டு சபாநாயகர் எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். அப்படி ஒன்று நடப்பதற்கு முன்பே, நீதிமன்றத்தை அணுகி, ஆளுநர் உத்தரவு வரும் வரையில் சபாநாயகர் எந்த முடிவையும் அறிவிக்க கூடாது என தடை உத்தரவு வாங்கியிருக்கலாம். அதைச் செய்யத் தவறிவிட்டோம்.
தப்பா சொல்லிவிட்டனர்
கர்நாடகாவில் எதியூரப்பாவுக்கு எதிராக ஆளுநர் பரத்வாஜ் செயல்பட்டார் என்றால், அப்போது டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தமிழ்நாட்டில் தற்போதைய சூழல் அப்படியில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நமக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள். ஆளுநரிடம் மனு கொடுத்தபோது, 'அரசு மீது நம்பிக்கை இல்லை' என்று கூறியிருந்தால், மிகப் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கும். அப்போது நம் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைத்திருக்கும். எம்.எல்.ஏ பதவி போய்விடக் கூடாது என்பதற்காக, 'முதல்வர் மீது நம்பிக்கையில்லை' எனக் குறிப்பிட்டுவிட்டனர்.
எனக்கு எதுக்கு பொ.செ. பதவி?
இதையே அவர்கள் சாதகமாக எடுத்துக் கொண்டனர். இப்போது கட்சியிலும் நான் இல்லை. ஆட்சியிலும் நாம் இல்லை. இல்லாத ஒரு கட்சிக்குப் பொதுச் செயலாளர் பதவி எதற்கு?' என ஆதங்கப்பட்டிருக்கிறார். சசிகலாவை எப்படி சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் தவிக்கிறாராம் தினகரன்.