இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணைய கெடு இன்றுடன் முடிகிறது.. சசிகலா தரப்பு ஆலோசனை
சென்னை: இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு சசிகலா தரப்பினர் இன்று பதில் அளிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15ம் தேதி டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, சசிகலா அணியினரும் நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்கள்தான், இப்போது எதிர்ப்பதாக கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
மார்ச் 20 கெடு
அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் சசிகலா நடராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்லை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
ஆலோசனை
இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி,வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பதில் ஏற்கப்படுமா
சசிகலா தரப்பு அளிக்கும் பதில் அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ளுமா என்ற பரபரப்பு தற்போது கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. இதே போல ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்றிரவு அவரது கோஷ்டியினர் பங்கேற்ற முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
நேரில் விசாரணை
மேலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக சசிகலா தரப்பினரையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் அழைத்து தேர்தல் விசாரணை ஆணையம் நடத்துகிறது. இதற்காக இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.