திமுகவின் சொந்த பணத்திலா மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டது? ஸ்டாலின் மீது பாய்ந்த சசியின் கணவர்!
திமுகவின் சொந்த பணத்திலா மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டது என சசிகலாவின் கணவர் நடராஜன் ஸ்டாலின் மீது பாய்ந்துள்ளார்.
சென்னை: திமுகவின் சொந்த பணத்திலா மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டது என சசிகலாவின் கணவர் நடராஜன் ஸ்டாலின் மீது பாய்ந்துள்ளார். மெட்ரோ ரயில் சேவை குறித்து ஸ்டாலின் தவறான தகவலை கூறி வருவதாகவும் நடராஜன் கூறியுள்ளார்.
அண்மையில் சென்னை கோயம்பேடு -நேரு பூங்கா வரையிலா மெட்ரோ சுரங்க ரயில் சேவையை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய வெங்கையா நாயுடுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மெட்ரோ திட்டத்தை கொண்டுவந்தவர் ஜெயலலிதா. சென்னையில் மெட்ரோ திட்டம் என்பது ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கூறினர்.
பெறாத பிள்ளை..
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் தான் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டது. பெறாத பிள்ளைக்கு பெயர் வைப்பதா எனக் கூறி சாடினார்.
மெட்ரோவை ரத்து செய்தவர் ஜெ.
ஜெயலலிதா மெட்ரோ திட்டத்தை ரத்து செய்துவிட்டு மோனோ திட்டமாக கொண்டுவந்தவர் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தனது அப்பாவால் தான் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.
திமுகவின் சொந்தப் பணமா?
இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவின் சொந்தப் பணத்திலா மெட்ரோ திட்டம் கொண்டுவரப்பட்டது என அவர் சாடினார்.
தவறான தகவலை பரப்புகிறார்
தன் அப்பாதான் மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவந்ததாக கூறி தவறான தகவலை அவர் பரப்பி வருவதாகவும் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார். மெட்ரோ சேவையை கொண்டுவந்தவர் ஜெயலலிதான் என்றும் அவர் கூறினார்.