மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசிக்கு மட்டுமே அனுமதி!
சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இளவரசியும் மட்டுமே இருந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா, மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் இளவரசியும் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேறு யாரும் சென்று பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவதால், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூட முதல் தளத்தோடு நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.
இதனிடையே, குணமடைந்த ஜெயலலிதாவை வீட்டு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.