ஓபிஎஸ்-சசிகலா அணிகளை அதிமுக தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும் - தீபா
இரட்டை இலை முடங்க காரணமான ஓபிஎஸ்-சசிகலா அணிகளை எம்ஜிஆரின் தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீபா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவின்போது அவர் உருவாக்கிய கொடியை பறக்கவிடாமல் தடை விதிப்பதற்கு காரணமான ஓபிஎஸ்-சசிகலா அணிகளை எம்ஜிஆரின் தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார்.
தமிழகத்தில் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை நடிகர் சங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
உண்மையாகவே எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா முடிவதற்குள் அவர் உருவாக்கி தந்த கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதற்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் முன்வருவார்களா என்பதே எம்ஜிஆரின் தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பும், கேள்வியும் ஆகும்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து எந்த திட்டமும் இரு ஊழல் அணிகளுக்கும் கிடையாது. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவின்போது அவர் உருவாக்கிய கொடியை பறக்கவிடாமல் தடை விதிப்பதற்கு காரணமான ஓபிஎஸ்-சசிகலா அணிகளை எம்ஜிஆரின் தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தில் திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகரின் நூற்றாண்டு விழாவை நடிகர் சங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் போற்றும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்ட தமிழ் திரைப்பட உலகத்தினர் முன்வர வேண்டும் என்று தீபா தெரிவித்துள்ளார்.