அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் செய்தது உச்சக்கட்ட துரோகம் - சசிகலா புஷ்பா
அதிமுகவினரை ஓ.பன்னீர் செல்வம் வஞ்சித்து விட்டார், அவர் செய்தது உச்சக்கட்ட துரோகம் என்று எம்.பி சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் இணைய முயற்சி செய்வதாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். அதிமுகவினரையும், தமிழக மக்களையும் ஓ.பன்னீர் செல்வம் வஞ்சித்து விட்டதாகவும், அவர் செய்தது உச்சக்கட்ட துரோகம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையப் போவதாக தகவல் வெளியானது. இணைப்பு முயற்சியை வரவேற்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அதே நேரத்தில் சசிகலா குடும்பம் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக் கூடாது என்று அவர் கூறவே இணைப்பு முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் இணைப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன் என்று கேட்டார். அவர் முதல்வர் பதவியில் இருந்தது வரை எந்த கேள்வியும் கேட்காத ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஜெயலலிதா சமாதிக்கு போய் கண்ணீர் விட்டு கதறியது ஏன் என்றார்.
இதனை நம்பி தொண்டர்கள் ஓபிஎஸ் பின்னால் சென்றார்கள். அவர்களை ஓ.பன்னீர் செல்வம் ஏமாற்றிவிட்டார். இப்போது பதவி கிடைக்கிறது என்பதற்காக மீண்டும் இணைய முயற்சி செய்கிறார் என்று கூறினார். இது அதிமுக தொண்டர்களுக்கு அவர் செய்த துரோகம் என்றார்.
ஒரு பெண்ணான தனக்கு இருக்கும் தைரியம் கூட அவர்களுக்கு இல்லை என்று கூறிய சசிகலா புஷ்பா, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போதே தான் சசிகலா நடராஜன் மீது பல்வேறு புகார்களை முன்வைத்ததாக கூறினார். அப்போது எல்லாம் ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன் ஆகியோர் வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருந்தார்கள் என்றும் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார்.
தலைமை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர் என்று கூறிய சசிகலா புஷ்பா, தன்னை நம்பி வந்த அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் உச்சக்கட்ட துரோகம் இழைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.