வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள்.. மதுரை வரும் சசிகலா புஷ்பாவை கைது செய்ய போலீஸ் ரெடி!
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவை மதுரை விமான நிலையத்தில் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் பணி புரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் 3 நாட் களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடார் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில் சசிகலா புஷ்பா பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். அப்போது அவரை கைது செய்ய போலீஸார் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.