சசிகலா புஷ்பா மீது 'நிர்வாண மசாஜ்' புகார் கொடுத்த வழக்கை திடீரென வாபஸ் பெற்ற பணிப்பெண்கள்!
சசிகலா புஷ்பா மீது நிர்வாண மசாஜ் புகார் கொடுத்த வழக்கை திடீரென அவரது வீட்டு பணிப்பெண்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் மீதான பாலியல் தொல்லை புகாரை அவர்களது வீட்டு பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் திடீரென வாபஸ் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை தாக்கினார். இந்த விவகாரத்தில் சசிகலா புஷ்பாவை முதல்வராக இருந்த ஜெயலலிதா கண்டித்தார் என கூறப்பட்டது.
இதையடுத்து ராஜ்யசபாவில் ஜெயலலிதா தம்மை தாக்கினார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
நிர்வாண மசாஜ்
அப்போது சசிகலா புஷ்பா மீது அவரது வீட்டுப் பணிப் பெண்களான பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த போது நிர்வாண நிலையில் மசாஜ் செய்ய வேண்டும் என துன்புறுத்தினார் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சசிகலா புஷ்பா குடும்பமே...
அதேபோல் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சசிகலா புஷ்பா இதை திட்டவட்டமாக மறுத்திருந்தார். தம்மை பழிவாங்குவதற்காகவே இந்த புகார் சுமத்தப்படுவதாகவும் சசிகலா புஷ்பா சுட்டிக்காட்டியிருந்தார்.
உச்சநீதிமன்றம் வரை...
இது தொடர்பாக சசிகலா புஷ்பாவிடம் தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தியும் இருந்தனர். இந்த வழக்குகளில் தம்மை கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றம் வரை போனார் சசிகலா புஷ்பா. இதனிடையே பணிப் பெண்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் சுகந்த் ஜெய்சன் வீடு தாக்கப்பட்டதும் சர்ச்சையாக வெடித்தது.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெறுவதாக தூத்துக்குடி போலீசில் பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும் சசிகலா புஷ்பாவை வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் அந்த பெண்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.,