அடுத்த அதிரடி... அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலா நீக்கம்?
அதிமுக பொதுக்குழுவை ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து கூட்டி சசிகலாவை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்க கூடும் என தெரிகிறது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை, போயஸ் கார்டன் பங்களா நினைவு இல்லம் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அதிமுகவின் அணிகள் இணைப்பில் விறுவிறுவென முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஓபிஎஸ் அணி முன்வைத்த கோரிக்கைகளில் தினகரன் நியமனம் செல்லாது; ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை, நினைவில்லமாகும் போயஸ் கார்டன் பங்களா முக்கியமானவை.
சிபிஐ விசாரணை
இவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடியாக நிறைவேற்றி உள்ளது. ஆனாலும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார் ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி.
தீபா அடம்
அதேபோல் ஜெயலலிதாவின் போயஸ் பங்களா வீட்டை கைப்பற்ற முடியாது என தீபாவும் அடம்பிடித்து வருகிறார். இதனிடையே இன்று சசிகலாவின் பிறந்த நாளை அவரது உறவினர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொதுக்குழு- சசி நீக்கம்
இந்நிலையில் சசிகலா தரப்புக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்பொது குழு கூட்டத்தில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இரட்டை இலை, கட்சி பெயர்
சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றினால் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் இயல்பாகவே திரும்ப இரு அணிகளுக்கும் கிடைத்துவிடும். ஆகையால் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என கூறப்படுகிறது.