சசிகலா இருக்குமிடம் தான் அதிமுக என்பதை காலம் பதில் சொல்லும்- திவாகரன்
ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி என்பது போல சசிகலா இருக்குமிடம் தான் அதிமுக என்பதை காலம் பதில் சொல்லும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
சென்னை: வீட்டில் இருந்த சசிகலாவை கொண்டு வந்து பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்து இன்று நட்டாற்றில் விட்டு சென்று விட்டதாக திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா இருக்குமிடம் தான் அதிமுக என்பதை காலம் பதில் சொல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலாவை ஒதுக்க அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் முடிவு செய்து விட்டனர். அணிகள் இணைந்த உடன் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சசிகலாவின் பிறந்தநாளான இன்று இது அவருக்கு அதிர்ச்சிகரமான பரிசுதான். இது குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
காலில் விழுந்தவர்கள்
இரு அணிகள் இணைப்பு நடைபெறுவது நல்லது தான். அப்போதுதான் நாங்கள் வியூகங்கள் வகுக்க மிக எளிதாக இருக்கும். அதிமுகவில் தற்போது பொறுப்பில் இருப்பவர்களில் 99 சதவிகிதம் பேர் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றவர்கள்தான்.
சசிகலாதான் அதிமுக
ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி என்பது போல சசிகலா இருக்குமிடம் தான் அதிமுக என்பதை காலம் பதில் சொல்லும்.
தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு இங்கு வந்து சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்வது என்பதெல்லாம் எத்தகைய செயல் என்று எண்ணுவது என்று கூறியுள்ளார்.
யாருக்கு ஜால்ரா போடுகிறார்கள்
தமிழ்நாடு அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்தல்ல. தமிழக ஜீவாதர பிரச்சினைகளை விட்டுக்கொடுத்து யாருக்காக ஆட்சியாளர்கள் ஜால்ரா போடுகிறார்கள். காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவிற்கு ஆட்சேபம் இல்லை என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகப் பெரும் கொடுமை.
ராஜினாமா செய்யட்டும்
தமிழக அரசு குறித்த கமல், ரஜினியின் கேள்விக்கு, விமர்சனம்செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு. சொல்லப்படும் விமர்சனத்தில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். முடியவில்லையெனில் ராஜினாமா செய்துவிட்டு செல்லட்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதை விட சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம்.
வீறு கொண்டு எழும்
இன்னும் மூன்று மாதங்களில் கட்சி முழு கட்டுப்பாட்டோடு வீறு நடை போட்டு எழும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணி இணையும் பட்சத்தில் யார் பதவியை எடுத்துவிட்டு யாருக்கு அமைச்சர் பதவி தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விமர்சனம் செய்வார்களா?
வீட்டில் இருந்த சசிகலாவை கொண்டு வந்து பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்து இன்று நட்டாற்றில் விட்டு சென்றுள்ளனர். வெத்துவேட்டு அனாதைகளெல்லாம் இன்று பொதுச்செயலாளரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.
என்று கூறியுள்ளார் திவாகரன்.