நீடாமங்கலம் வீடு இடிப்பு வழக்கு – சசிகலா சகோதரர் திவாகரன் கோர்ட்டில் ஆஜர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாலசுப்ரமணியன் என்பவரின் வீட்டை இடித்த வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி கஸ்தூரிக்கு சொந்தமான வீட்டை கடந்த 2011 நவம்பர் 28 ஆம் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாக 2012 ஜனவரி 21 ஆம் தேதி திருவாரூர் எஸ்.பி யிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் நீடாமங்கலம் போலீசார் 2012 ஜனவரி 25 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து சசிகலா தம்பி திவாகரன், ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், ரிஷியூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், நீடாமங்கலம் குணசேகரன், பொக்லைன் உரிமையாளர் வீரசிவசங்கர், பூவனூர் பொக்லைன் டிரைவர் சக்தி ஆகிய 9 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பிறகு அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தாங்கள் குற்றவாளி இல்லை என அறிவிக்ககோரி கிருஷ்ணமேனன் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கு முடியும் வரை 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 6 பேரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் திவாகரன், வீரசிவசங்கர் ஆகிய 2 பேரும் நேற்று நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர்மன்ற நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
உடல் நிலை சரியில்லாததால் பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் சக்தி ஆஜராகவில்லை. நீதிபதி முருகன் அனைவரும் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.