அடுக்கடுக்கான வழக்குகள்.. அசந்துபோயுள்ள சசிகலா.. மன்னார்குடி கோஷ்டியின் முழு கேஸ் லிஸ்ட்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்புக்கு வந்ததோடு, தமிழக முதல்வராகவும் அமர ஆசைப்படும் சசிகலாவுக்கு இப்போதே ஏகப்பட்ட சிக்கல்கள்.
அவர் மீது என்று மட்டுமல்ல, அவரது குடும்பத்தார் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையிலுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த வழக்கு. ஆனால் அதைத் தவிர்த்து பல வழக்குகள் இன்னும் நிலுவையிலுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கை பொறுத்தளவில் அதன் தீர்ப்பு மே 5ம் தேதிக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம் என தெரிகிறது. இதில் தண்டனை கிடைத்தால் முதல்வராக இருந்தாலும் பதவியை விட்டு கீழே இறங்க வேண்டிவரும். சிறைக்குள் தள்ளப்படுவார்.
சசிகலா மீது வழக்கு
1990களில் வெளிநாட்டு பண பரிமாற்ற சட்டம் (ஃபெரா) தொடரப்பட்ட வழக்கும் நிலுவையிலுள்ளது. இந்த வழக்கில் சசிகலா 1996ல் கைது செய்யப்பட்டிருந்தார். 2015ல் சசிகலா மீதான இரு ஃபெரா வழக்குகள் தள்ளுபடியானாலும் கூட மேலும் 3 வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. தள்ளுபடி செய்த 2 வழக்குகளிலும் கூட அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு
மேலும், சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தார் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையிலுள்ளன. சசிகலாவின் அண்ணி இளவரசி, சசிகலாவின் அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீது கிரிமினல் வழக்குகள் பெண்டிங்கில் உள்ளன.
திவாகரன்
திருவாரூரில், திமுக ஆதரவாளர் வீட்டை இடித்த வழக்கு ஒன்றில் 2012ல் இவர் கைது செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பம் ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில் சட்ட விரோத மணல் குவாரி வழக்கு திவாகரன் மீது பாய்ந்தது. நில அபகரிப்பு புகார்கள் குவியத் தொடங்கின. இதனால் 2013ல் மீண்டும் கைது செய்யப்பட்டவர் திவாகரன்.
டிடிவி தினகரன்
அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபா எம்.பியான டிடிவி தினகரனும், சசிகலா அக்கா வனிதாமணியின் மகன்தான். பண மோசடி மற்றும் பினாமி பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். கடந்த வாரம் கூட இவருக்கு விதிக்கப்பட்ட ரூ.25 கோடி அபராதத்தை ஹைகோர்ட் உறுதி செய்திருந்தது. ஃபெரா சட்டத்தின்கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவை போலவே இவர் மீதும் நிறைய ஃபெரா வழக்குகள் பெண்டிங் உள்ளன.
டிடிவி பாஸ்கரன்
முன்பு ஜெயலலிதா தொடங்கிய, ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்தவர், பாஸ்கரன். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன். இவர் மீதும் ஃபெரா வழக்கு உள்ளது. ஜே.ஜே. டிவி இருந்தபோது நடந்த முறைகேடுதான் இது. சசிகலாவும் இவ்வழக்குகளில் தொடர்புடையவர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக பாஸ்கரன் 2013ல் கைது செய்யப்பட்டார்.
டாக்டர் எஸ்.வெங்கடேஷ்
சசிகலாவோடு பிறந்தவர்களில் முதலாமவர் சுந்தரவதனம். இவரது மனைவி பெயர் சந்தானலட்சுமி. இவர்களது மகன் தான் டாக்டர்.வெங்கடேஷ். அதிமுக முன்னாள் இளைஞர் பொதுச் செயலர் பதவியில் இருந்தரா். நில அபகரிப்பு வழக்கில் 2013ல் கைது செய்யப்பட்டார்.
ஆர்.பி.ராவணன்
சசிகலாவின் தந்தையின் சகோதரர் மருமகன் ஆர்.பி.ராவணன். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டை அவர்தான் பராமரித்து வருகிறார். 2012ல் கடத்தல், பணம் கேட்டு மிரட்டியது போன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். திருப்பூர் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கிலும் இவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
எம்.நடராஜன்
சசிகலாவின் கணவரான நடராஜன், நில மோசடி வழக்கில் 2012ல் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே 20 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது நடவடிக்கைக்கு உள்ளாகினார். அதே பகுதியில் மற்றொரு நில வழக்கிலும் 2 மாதங்களுக்கு பிறகு இவரது பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.