இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு... டெல்லி செல்வாரா சசிகலா?
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்காக தேர்தல் ஆணைய உத்தரவை முன்வைத்து சசிகலா டெல்லி செல்லக் கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் சசிகலா டெல்லி செல்லக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பரோல் கோரி சசிகலா விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அதிமுக கோரியுள்ளது. ஆர்கே நகரில் வரும் 24-ந் தேதி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
தற்போது இரட்டை இலை சின்ன விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்கிறது. ஓபிஎஸ், சசிகலா அணிகள் வரும் 22-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சசிகலாவே டெல்லி செல்ல இருக்கிறாராம். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காட்டி பரோல் கேட்கவும் சசிகலா முடிவு செய்துள்ளாராம்.
பெங்களூருவில் இருந்து நேரடியாக டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் சசிகலா தமது வாதங்களை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது. டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வரவும் சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.