முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய "விஐபி"யாக.. சசிகலா பங்கேற்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய விஐபிக்களில ஒருவராக சசிகலாவும் கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.
அதை விட முக்கியமாக சமீபத்தில்தான் அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட செந்தில் பாலாஜியும் வந்திருந்தார். இவர் எந்த "கெப்பாசிட்டி"யில் கலந்து கொண்டார் என்பதுதான் தெரியவில்லை.
பெரும் பரபரப்பாக அதிமுக அரசால் பேசப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா இதைத் தொட்ங்கி வைத்தார்.
2500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இவர்களில் சில தலைகள் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. அதில் ஒருவர் சசிகலா. முதல்வரின் நெருங்கிய தோழியான சசிகலா, முதல்வரின் நிகழ்ச்சிக்கு முன்பு போல வருவதில்லை. இந்த நிலையில் இன்று முதல் வரிசையில் அமர்ந்து ராஜ மரியாதையுடன் மாநாட்டைப் பார்த்து ரசித்தார் சசிகலா.
அதேபோல செந்தில் பாலாஜியும் மாநாட்டுக்கு வந்திருந்தார். இவர் போக்குவரத்து அமைச்சராகவும், ஜெயலலிதாவின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவருமாக இருந்தவர். ஆனால் அவரை சமீபத்தில் தூக்கி அடித்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் அவரும் மாநாட்டுக்கு வந்தது அனைவரையும் வியக்க வைத்தது.
இப்படி முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சில ஆச்சரியங்களும் தலை தூக்கிக் காணப்பட்டன.