பெங்களூரு சிறையில் விதிமீறல், சசிகலாவை திகாருக்கு மாற்ற வேண்டும்: ராமதாஸ்
சேலம்: சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சியின் தலைவராக இருக்க தடை விதிக்க வேண்டும். அதிமுக அரசு நீடிக்காது. சசிகலா இருக்கும் பெங்களூரு சிறையில் விதிமுறைகள் மீறப்படுவதாக கூறப்படுகிறது.
அவரை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனால் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும். சேலம் உருக்காலை தனியார்மயமாகிவிடுமோ என்ற பயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க பாமக விடாது. அதை எதிர்த்து போராடும் என்றார்.