பொதுச்செயலாளர் விவகாரம்: சுத்தி சுத்தி வேலைசெய்யும் சசி அணி.. கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அளிக்கப்பட்ட புகாரை எதிர்த்து சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அளிக்கப்பட்ட புகாரை எதிர்த்து சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் பிரமாணப் பத்திரங்களில் மாவட்ட நிர்வாகிகள் கையெழுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தன்னை பொதுச்செயலாளராக நியமித்துக் கொண்டு சசிகலா கட்சியயை கைப்பற்றினார். ஆட்சியையும் அவர் கைப்பற்ற முயன்றதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்து தனி அணியாக செயல்பட்டுவரும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சசிகலா அணியினர் கூடுதல் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.
12752 பக்க பிரமாணப் பத்திரம்
அவர்கள் 12752 பக்க பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் மாவட்ட நிர்வாகிகளின் கையெழுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 1991 பக்கங்கள்
ஏற்கனவே 1991 பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணி தாக்கல் செய்துள்ளது. அவற்றில் பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் முடிவு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இரு அணிகளும் தங்கள் பக்க ஆவணங்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் பொதுச்செயலாளர் விவகாரத்தில் விரைவில் முடிவு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.