ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட ஓபிஎஸ், சசிகலா அணிகள் போட்டி - மாறி மாறி அழைப்பு
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை ஓபிஎஸ் அணியினரும் சசிகலா அணியினரும் போட்டு போட்டுக்கொண்டு கொண்டாட உள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கு சசிகலா பெயரில் அதிமுக தலைமை அலுவலகமும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனும் போட்டி போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தனர். அவர் முதல்வராகவும் ஆசைப்பட்டதால் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டுள்ளது.
அதிமுகவில் பிளவு
ஓபிஎஸ், சசிகலா அணி என இரு அணிகளாக உள்ளன. இதில் ஓபிஎஸ் அணிக்கு சென்ற அவைத்தலைவர் மதுசூதனன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பொன்னையன் உள்ளிட்ட பல நிர்வாகிகளையும் கட்சியை விட்டு நீக்கினார் சசிகலா. ஆனால் சசிகலாவிற்கு நீக்க உரிமையில்லை என்று கூறி மதுசூதனன் தான்தான் அவைத்தலைவர் என்றும், சசிகலா உள்ளிட்ட அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாகவும் கூறி அறிவிப்பு வெளியிட்டார்.
டிடிவி தினகரன்
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருக்கிறார். தனக்கு பதிலாக கட்சியை நிர்வாகிக்க டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார் சசிகலா. கட்சியை நிர்வகிப்பதோடு, ஆட்சி நிர்வாகத்திலும் தலையிடுகிறார் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா பிறந்தநாள்
ஜெயலலிதா பிறந்தநாள் வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் அவைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் பிறந்தநாள் கொண்டாடப்படும் என்றும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா ஒப்புதலுடன் அறிக்கை
சசிகலா சிறையில் இருப்பதால் அவரது கையெழுத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில் சசிகலா ஒப்புதலுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் கூறியுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாள் மலரை செங்கோட்டையன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுசூதனன் அழைப்பு
இதேபோல ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து பகுதி, நகர, ஒன்றிய, கிளை பகுதிகளில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, ஏழை எளியோருக்கு நல உதவிகளையும், அன்னதானமும் வழங்கி, ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
போட்டி போட்டு கொண்டாட்டம்
ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் லட்சக்கணக்கில் மரம் நடுவார்கள். இந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்தநாளை இரு அணியினரும் மாறி மாறி உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இரு அணியினரும் அழைப்பு விடுத்துள்ளதால் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என போட்டி போட்டு கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.