ஆக மொத்தம் 3 அதிமுக.. அடுத்து என்ன நடக்கப் போகுதோ!
கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா, தினகரன் ஆகியோரின் தலையீடு இருக்காது என்று ஜெயகுமார் தெரிவித்ததை அடுத்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சென்னை: கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா, தினகரன் ஆகியோரின் தலையீடு இருக்காது என்று ஜெயகுமார் தெரிவித்ததை அடுத்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து நேற்றிரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினகரன் வீட்டிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சசிகலா, தினகரன் கட்சியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு உடன்பாடில்லை என்று பெரியகுளத்தில் ஓபிஎஸ் கறாராக தெரிவித்தார். இதற்கு சசிகலா கோஷ்டி எம்எல்ஏ வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்தார்.
வேதாளம் முருங்கை மரத்தில்...
இதுகுறித்து டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு வெற்றிவேல் கூறுகையில், பன்னீர் செல்வம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார். யாருக்கும் மண்டியிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் 122 எம்எல்ஏ-க்கள் உள்ளனர், ஓபிஎஸ்ஸிடம் வெறும் 11 எம்எல்ஏ-க்களே உள்ளநிலையில் அவர்தான் இறங்கி வர வேண்டும் என்றார்.
பழைய பல்லவி
ஓபிஎஸ் கருத்து குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவிக்கையில், பன்னீர் செல்வம் மீண்டும் பழைய பல்லவியையே பாடி வருகிறார் என்றார் அவர்.
இணைவது சாத்தியமில்லை
இந்த இரு அணிகளின் முரண்பட்ட கருத்துகளாலும், பிடிவாதத்தாலும் அதிமுக ஒன்றிணைவது சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவா என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன் அமைச்சர் ஜெயகுமார் இரவு ஆலோசனை நடத்தினார்.
தனிக்குழு
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சிப் பணிகளை கவனிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதவிகள் பறிக்கப்படலாம்
இரு அணிகளும் இணைய பன்னீர் செல்வம் விடுத்த நிபந்தனைகள் ஏற்கப்பட்ட நிலையில், பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவின் பதவியையும், துணை பொதுச் செயலாளராக உள்ள தினகரனின் பதவியையும் நீக்கப்படலாம் என்பதால் அதுகுறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இதனால் தினகரன் தலைமையில் மற்றொரு அணி உருவாகியுள்ளதால் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது.