பாகுபலி படம் போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாம் 'சின்னம்மா'வின் சிறை வீடியோ.. புகழேந்தி ஆவேசம்
சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வாழ்க்கை என்று வெளியான சசிகலா பற்றிய வீடியோ அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.
சென்னை: சசிகலா பற்றி வெளியான வீடியோ அனைத்தும் கிராபிக்ஸ் என்று தினகரன் டீமியில் உள்ள புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தினகரனை சந்தித்து புகழேந்தி பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலா பற்றி குற்றச்சாட்டுக்களை முன் வைத்த டிஐஜி ரூபாவைப் பற்றி பரபரப்புக் புகார் கூறினார்.
அவர் தனக்கு அளிக்கப்பட்ட 2 மெமோக்களில் இருந்து தப்பிக்கவே சசிகலாவின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:
பாகுபலி திரைப்படம் போல் கிராபிக்ஸ்
சசிகலா போட்டோ, வீடியோ அனைத்தும் பாகுபலிபட திரைப்படம் போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்திற்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
சமைக்க முடியாது
சட்டப்படி சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அது தவிர சசிகலாவிற்கு கூடுதலாக ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அப்புறம் எப்படி அவர் அங்கு சமைக்க முடியும். நியாயம் இல்லாமல், இதயம் இல்லாமல் இப்படி பேசுகிறார்கள்.
புவர் ஈட்டர்
சசிகலா 20 ஆண்டுகள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். 63 வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் நிறைய சாப்பிட முடியாது. அவர் கொஞ்சம் தான் சாப்பிடுவார். இவரைப் பற்றி தொடர்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும்.
நிரூபிக்கத் தயாரா?
சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும். பரப்பன அக்ரஹாரா சிறை 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும்.
குற்றமற்ற ‘தாய்’
ஆகவே, சசிகலாவிற்கு எந்தவித சலுகையும் சிறையில் அளிக்கப்படவில்லை. இதனை பொய் என்று நாங்கள் நிரூபிப்போம் என்று புகழேந்தி கூறியுள்ளார்.