ஜெயலலிதாவின் நிழல் சசிகலா... சட்டசபையில் அமைச்சர் புகழாரம்
ஜெயலலிதாவின் நிழல் போல இருந்தவர் சசிகலா என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் சட்டசபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக விளங்கியவர் சசிகலா என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கைத்தறித்துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வெளியிட்டார். தனது உரையை தொடங்கிய அவர், ஜெயலலிதாவின் நிழலாக விளங்கியவர் சசிகலா என்றார்.
இரட்டை இலையை விரைவில் மீட்போம் என்றும் கூறிய ஓ.எஸ் மணியன், பொதுச்செயலாளர் சசிகலாவை வணங்கி பதிலுரையை நிறைவு செய்வதாக சட்டசபையில் கூறினார். முன்பெல்லாம் ஜெயலலிதா இருந்த திசை நோக்கி அமைச்சர்கள் வணங்கி விட்டு பேசுவார்கள். இப்போது சசிகலாவை வணங்கி பேசியுள்ளார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர்.
சசிகலா வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார் என்பதற்காகவே அவரை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் சிலர் பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபையில் சசிகலாவை புகழ்ந்து பேசியதோடு அவரை வணங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.