சசிகலா பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார்.. அடித்து சொல்கிறார் கணவர் நடராஜன்
சொத்துக் குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் நீதி கிடைத்து எனது மனைவி நிச்சயம் மீண்டு வருவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எனது மனைவி சசிகலா சீராய்வு மனுவில் நீதி கிடைத்து வெளியே வருவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் கீழமை நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவருக்கு மட்டும் ரூ.100 கோடி அபராதமும், ஏனையவர்களுக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து பெங்களூர் நீதிமன்றத்தில் 4 பேரும் வழக்கு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி குமாரசாமி மேற்கண்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து பெங்களூர் கீழமை நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதற்குள் ஜெயலலிதா உடல் நல குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ஆம் தேதி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விலக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினார்கள். அவர் இறந்துவிட்டதால் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறை தண்டனை விதிக்க முடியாது எனவும் கூறினர்.
மறுசீராய்வு மனு
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மே 4-ஆம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 90 நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற அடிப்படையில் இந்த மனுவை சசிகலா வழக்கறிஞர் செந்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போன்று தமக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என சசிகலா கோரியுள்ளார்.
சசிகலாவின் கணவர் பேட்டி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில்,
ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைவராக வருவதற்கு நாங்கள்தான் பின்னணியில் இருந்தோம். 1980-ம் ஆண்டுவாக்கில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் நாங்கள் அவருக்கு உதவியாக செயல்பட்டோம்.
எம்ஜிஆர் இறந்த தகவலை கூட தெரியாது
எம்.ஜி.ஆர். இறந்த போது, அந்த தகவலை கூட ஜெயலலிதாவுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. என் மனைவி சசிகலாவையும், தினகரனையும் அதிகாலை 5 மணிக்கு ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பி தகவலை சொல்ல சொன்னேன். மேலும் அவரை அழைத்து வந்து எம்.ஜி.ஆர். உடல் அருகே நிற்க வைத்தோம். அவர் பீரங்கி வண்டியில் ஏறிய போது, சிலர் கீழே தள்ளி விட்டார்கள். சசிகலாதான் அவரை தாங்கி பிடித்தார்.
இரு அணிகளும் இணைவர்
எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்னும் ஒரு வாரத்தில் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். ஊழல் வழக்கில் எனது மனைவியும், குடும்பத்தினரும் தவறான முறையில் தண்டனை பெற்றுள்ளனர். இது சம்பந்தமான சீராய்வு மனுவில் அவர்களுக்கு நீதி கிடைக்கும். அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
மோடி உதாரணம்
சாதாரண மனிதர்களாலும் ஆட்சிக்கு வர முடியும், வரலாற்றை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அறிஞர் அண்ணாதுரை, நரேந்திர மோடி ஆகியோர் உள்ளனர் என்று நடராஜன் கூறினார்.