மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோல் கேட்கவில்லை- புகழேந்தி
மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலா பரோல் கேட்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலா பரோல் கேட்கவில்லை , எனவே அவர் பரோலில் வர வாய்ப்பில்லை என்று அதிமுக அம்மா கட்சியின் கர்நாடக மாநில தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் இன்று காலையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து, இறுதிச்சடங்குகளுக்காக அவரது உடல் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
டிடிவி தினகரன்
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு மகாதேவன், தாய்மாமன் மகன் ஆவார். எனவே தனது தாய் மாமா மகன் மகாதேவனின், இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் டிடிவி தினகரன்
சசிகலா அண்ணன் மகன்
பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது அண்ணன் மகன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வெளியே வருவார் என தகவல்கள் வெளியானது. இதற்காக அவர் உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறப்பட்டது. சசிகலா விரும்பினால் நடவடிக்கை எடுப்போம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
பரோலில் வரமாட்டார்
இந்தநிலையில் சசிகலா பரோலில் வர வாய்ப்பில்லை என்று அதிமுக அம்மா கட்சியின் கார்நாடக மாநில தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி தனது அண்ணன் மகன் மகாதேவன் மறைவால் சசிகலா மிகுந்த வருத்ததில் உள்ளார். மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பரோல் கேட்கவில்லை, எனவே அவர் பரோலில் வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
விரும்பாத சசிகலா
சசிகலா கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூரில் நடந்த விவேக் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் பின்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உறவினர் மரணத்திற்குக் கூட செல்லவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.