சசிபெருமாளின் சட்டையில் ரத்தம் வந்தது எப்படி?: டாக்டர்கள் சொல்லும் காரணம்
கன்னியாகுமரி: சசிபெருமாளின் உடலில் சர்க்கரை அளவு குறைந்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்புக்கு முன்னதாக பித்தம் நுரையீரலுக்கு வரும் மூச்சு குழாயை அடைத்து விடும். இதனால் மாரடைப்பு ஏற்படலாம். அந்த சமயத்தில் வயிற்றில் இருந்து வந்த பித்தம் ரத்த வாந்தியாக வெளியேறியிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு அருகில் உள்ள உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்தார். அப்போது அவரது உடைகளில் ரத்தம் இருந்தது. இந்த மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் சசிபெருமாள் உடலில் ரத்தக்கறை வந்தது எப்படி என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். செல்போன் டவர் மீது ஏறி போராடிய சசி பெருமாள், செல்போன் டவரில் ஏறி 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றுள்ளார். சுமார் 200 அடிக்கும் உயரமான இடமென்பதால் இயல்பாகவே ஆக்சிஜன் அளவு குறைவாகத்தான் இருக்கும்.
வெயில் அதிகமான நேரத்தில் அவரை ஹீட் ஸ்ட்ரோக் தாக்கியிருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக எந்த உணவும் இல்லாமல் அவ்வளவு உயரத்தில் அவர் இருந்துள்ளார். இதனால் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கும். அதுவும் சர்க்கரை நோய் இருந்தால், பாதிப்பு அதிகமா இருந்திருக்கும்.
சர்க்கரை அளவு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அப்போது மாரடைப்புக்கு முன்னதாக பித்தம் நுரையீரலுக்கு வரும் மூச்சு குழாயை அடைத்து விடும். இதனால் மாரடைப்பு ஏற்படலாம். அந்த சமயத்தில் வயிற்றில் இருந்து வந்த பித்தம் ரத்த வாந்தியாக வெளியேறும். அப்படியே சசி பெருமாள் மயங்கியிருக்கலாம். ரத்த வாந்தி காரணமாக சட்டையில் ரத்தம் சிந்தியிருக்கிறது. இப்படிதான் சசி பெருமாளின் மரணம் நேரந்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.