சசிபெருமாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்ததாக போலீஸ் வழக்கு பதிவு
நாகர்கோவில்: சசிபெருமாள் இறப்பு இயற்கைக்கு மாறான மரணம் (சிஆர்பிசி-174) என மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நட்டாலம் கிராம நிர்வாக அதிகாரி சந்தியா அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சசிபெருமாள் தனக்கு தானே கழுத்தில் கயிறு மாட்டி தொங்கியதாகவும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் நடத்திய சசி பெருமாள், நேற்று உயிரிழந்தார். தானாக செல்போன் டவரில் ஏறி, உச்சிக்கு சென்றதில் திடீர் மரணம் நிகழ்ந்து உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் அளித்துள்ள முதல் தகவல் அறிக்கை:
மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் உள்ள செல்போன் டவரில் சசி பெருமாள் ஏறி நின்றார். கையில் மண்எண்ணெய் கேன் மற்றும் கயிறு வைத்திருந்தார். அவருடன் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் கோபுரத்தின் மத்திய பகுதியில் நின்றார்.
மேல் பகுதியில் நின்ற சசி பெருமாளை போலீசாரும், அதிகாரிகளும் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர்.அவர் இறங்க மறுத்தார். இதுபற்றி நட்டாலம் கிராம அதிகாரி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர்.
அவர்கள் கோபுர உச்சிக்கு சென்று சசி பெருமாளை கீழே இறக்கினர். அப்போது அவர், தனக்கு தானே கழுத்தில் கயிறு மாட்டி தொங்கியது தெரிய வந்தது. உடனே அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சசி பெருமாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே சசி பெருமாள் சாவு குறித்து இந்திய தண்டனைச் சட்டம் 174-ன் கீழ் (தற்கொலை) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக செல்போன் டவர்களில் ஏறுவது சட்டப்படி குற்றமாகும். எனினும், சிலர் சட்டவிரோதமான முறையில் ஏறுகின்றனர். மேலும், செல்போன் டவர்களில் கதிர்வீச்சு இருக்கும். இருப்பினும் ஒருவர் உயிரை பாதிக்கின்ற அளவிற்கு இருக்காது. சசிபெருமாள் விஷயத்தில் அவர் டவர் மீது ஏறியவுடன் அவருக்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகக்கூட அவர் உயிரிழந்திருக்கலாம் என்று பி.எஸ்.என்.எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.