சேலத்தில் தடையை மீறி உண்ணாவிரதம்: சசி பெருமாள் மகன்- மகள் கைது
சேலம்: சேலம் காந்தி சிலை முன்பு தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சசிபெருமாள் மகன், மகள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக் கை அமுல்படுத்தக்கோரி குமரி மாவட்டம் உண்ணாமலையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்தும் வரை சசிபெருமாள் உடலை வாங்கமாட்டோம் என்று கூறிவிட்டு உறவினர்கள் சனிக்கிழமையன்று மாலை அவர்கள் சொந்த ஊரான சேலம் இளம்பிள்ளை திரும்பினார்கள்.
உண்ணாவிரதம்
இதற்கிடையில் சசிபெருமாளின் கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவரது இளைய மகன் நவநீதன் அறிவித்தார். காந்தி சிலை முன்பு சசிபெருமாளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அனுமதி மறுப்பு
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு நவநீதன் நேற்று மாலை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
சேலம் உதவி கமிஷனர் ரவீந்திரன், டவுன் இன்ஸ் பெக்டர் ராஜா ஆகியோர் சசிபெருமாளின் சொந்த ஊருக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, அதற்கு எந்த அனுமதியும் இல்லை என்று அவர்களது குடும்பத்தினரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனாலும் தடையை மீறி காந்தி சிலை முன்பு திட்ட மிட்டப்படி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
காலவரையற்ற உண்ணாவிரதம்
இதையடுத்து காந்தி சிலை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்தனர்.
மகன் – மகள் கைது
திட்டமிட்டபடி சசிபெருமாளின் மகன் நவநீதனுக்கு பதில் மற்றொரு மகனான விவேக் மற்றும் மகள் கவியரசி (வயது 11), ஆகியோர் காந்தி சிலைக்கு முன்பு இன்று உண்ணா விரதம் இருக்கவந்தனர்.அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
போலீஸ் தள்ளு முள்ளு
இதனால் கோபம் அடைந்த சேலம் மாநகர் ம.தி.மு.க. பொறுப்பாளார் வக்கீல் ஆனந்தராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் சென்று ஏன் அவர்களை கைது செய்தீர்கள்? என்று கேட்டார். இதனால் போலீசாருக்கும், வக்கீல் ஆனந்தராஜுக்கும் மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வக்கீல் ஆனந்தராஜையும் போலீசார் கைது செய்தனர்.
ஆதரவாளர்கள் கைது
இதேபோல் சேலம் மாவட்டம் அமரகுந்தியை சேர்ந்த சசிபெருமாள் நண்பர் அருணாசலம் (57) என்பவர் தொடர்ந்து 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். அதற்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அவர் பல்வேறு கோஷங்களை முழங்கியவாறு ஓடினார். போலீசார் அவரையும் கைது செய்தனர்.
25 பேர் கைது
சசிபெருமாள் மகன், மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களில் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநில தலைவர் பூமொழி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இளம்பிள்ளை அருகே இ.மேட்டுக்காடு பகுதியில் உள்ள சசிபெருமாள் வீட்டின் முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
மவுன ஊர்வலம்
முன்னதாக இளம்பிள்ளையில் அனைத்துக் கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. சசிபெருமாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காந்திய மக்கள் இயக்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
போலீஸ் குவிப்பு
சேலம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை மாவட்டங்களில் இருந்தும், போலீசார் இளம்பிள்ளைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.