பொய் புகார் சதி... 5 சகோதரிகளை அரவிந்தர் ஆசிரமத்தை விட்டு வெளியேற்ற கோர்ட் உத்தரவு
புதுவை: அரவிந்தர் ஆசிரமத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்ட ஐந்து சகோதரிகளை வரும் ஜூன் 31ம் தேதிக்குள் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்ற வெண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் உள்ளது அரவிந்தர் ஆசிரமம். அங்கு தங்கியுள்ள ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத், ஹேமலதா பிரசாத் ஆகியோர் மீது கடந்த 2002-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரையின் பேரில், ஹேமலதா பிரசாத் மீது பல்வேறு புகார்களைக் கூறி, ஆசிரம நிர்வாகம் 5 சகோதரிகளையும் வெளியேறுமாறு கூறியது.
ஆனால், அவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறாமல் ஆசிரம நிர்வாகத்தினர் மீது பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் பூர்ணிமா அத்வானி புதுவை வந்தபோது அவரிடமும் சகோதரிகள் புகார் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை நடத்திய விசாரணையில், ஆசிரமத்தின் மீது வேண்டுமென்றே அவப்பெயரை உண்டாக்க சகோதரிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டியது அம்பலமானது.
இதையடுத்து, ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என சகோதரிகளுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ஜெயஸ்ரீ பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணை முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதான்சு ஜோதி முகோபத்யா, ரஞ்சன் கோகோய் ஆகியோர் கொண்ட அமர்வு, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ஐந்து சகோதரிகளும் ஆசிரமத்தில் உள்ளவரை அங்குள்ள விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், கெடு விதிக்கப் பட்ட நாட்களுக்குப் பிறகும் அவர்கள் வெளியேறவில்லை என்றால் ஆசிரம நிர்வாகம் நீதிமன்ற அவதமதிப்பு வழக்கை தொடரலாம் எனவும் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.